Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 18 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்றுள்ள போதிலும், இரண்டாவது போட்டிக்கான அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ள உப தலைவர் லஹிரு திரிமான்ன, இந்தப் போட்டியிலும் ஓட்டங்களைப் பெறத் தவறியதால், அதிக கவனத்தைச் சந்தித்துள்ளார்.
அதேபோல், தூஸ்ரா பந்துவீச்சை வீசுவதற்குத் தடை விதிக்கப்பட்ட இளம் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷால், இப்போட்டியில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளரான டில்ருவான் பெரேரா, டெஸ்ட் குழாமில் காணப்படுவதால், தரிந்து கௌஷால் மீது அதிகமான அழுத்தம் காணப்படுகின்றது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், 'திரிமான்னவினதும் தரிந்து கௌஷாலினதும் பெறுபேறுகள் எமக்குக் கவலையளிக்கின்றன. தேர்வாளர்களுடன் கலந்துரையாடுவேன், அதன் பின்னர் 2ஆவது டெஸ்டில் அவர்களது இடம் பற்றி முடிவெடுக்கப்படும்" என்றார்.
அத்தோடு, 'தரிந்து கௌஷால் மிகவும் ஏமாற்றமளித்தார். அவரது சிறப்பான ப்நதுவீச்சை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இந்த ஆடுகளம், அவருக்குப் பொருத்தமானதாக இருக்குமென நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக, இப்போட்டியில் அவர் மிகவும் மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தினார்" எனத் தெரிவித்தார்.
போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இலங்கைக்கு வெற்றியை வழங்கிய சிரேஷ்ட பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத்தைப் புகழ்ந்த மத்தியூஸ், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும், கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவரது உடல் எடை குறைந்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, இன்னும் சில வருடங்கள் அவரால் விளையாட முடியுமென எண்ணுவதாகத் தெரிவித்தார்.
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியில், இலங்கை அணி ஓர் இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .