Sudharshini / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட புவனேந்திரன் தேவராசா (43 வயது) என்ற குடும்பஸ்த்தரின் எலும்புக்கூடு, நொச்சிக்குளம் -சாந்திபுரம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று மாலை(23) மீட்கப்பட்டுள்ளதென திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 8ஆம் மாதம் 27ஆம் திகதி தேவராசாவின் மனைவி, தனது கணவன் காணமல் போயுள்ளதாகவும் அதற்கு தர்ஷன் என்பரே காரணம் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
கடந்த 08ஆம் மாதம் 27ஆம் திகதி தர்ஷன் என்பவர் தனக்கு அழைப்பை ஏற்படுத்தி காட்டுப்பகுதியில் கணவரை தடுத்து வைத்துள்ளதாகவும் பணம் மற்றும் நகைகளை கொண்டு வந்து கொடுத்து விட்டு அவரை மீட்டு செல்லும்படி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனது மகனையும் அழைத்துக் கொண்டு குறித்த காட்டுப்பகுதிக்கு தர்ஷனுடன் சென்றுள்ளார். காட்டுப்பகுதிக்குள் செல்வதை அவதானித்து அவ்வழியில் சென்ற ஒருவர் வினவியதும் தன்னையும் மகனையும் அவ்விடத்திலே விட்டு தப்பிச் சென்று விட்டார் என முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட தலைமையக பொலிஸார், சந்தேக நபரை கைதுசெய்து விசாரணைகளை தொடர்ந்து, குறித்த நபரை கொலை செய்ததாகவும் கொலை செய்த இடத்தையும் குறித்த நபர் காண்பித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த 2011-10-11ஆம் திகதி நொச்சிக்குளம் பகுதியில் தனது பெரியம்மாவான தங்கம்மா என்பவரை அழைத்துச் சென்று கொலை செய்ததாகவும், 2013-09-30ஆம் திகதி சோமநாதன் சத்தியசீலன் என்ற 17 வயது சிறுவனை குளத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருடங்கள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சம்பவ இடத்துக்கு திருகோணமலை நீதவான் டி.சரவணராஐா சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .