2026 மார்ச் 19, வியாழக்கிழமை

சூழல் சமநிலை தொடர்பில் விழிப்பாக இருங்கள்: சி.வி.

Princiya Dixci   / 2015 நவம்பர் 02 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் இடம்பெறும் காடு அழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சூழல் சமநிலை பாதிக்கப்படுவது தொடர்பில் விழிப்பாக இருங்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாவற்குளி நீரேரிக்கு அண்மையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற மரம் நடுகை மாதத்தின் தொடக்க விழாவின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 

மனிதர்களின் தான்தோன்றித்தனமான போக்குகளால் இயற்கையின் சமநிலை பாதிப்படைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்த போதும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. கடந்தகாலத் தவறுகளைச் சீர்செய்ய வேண்டியுள்ளது. 

மரங்களின் வேர்களினால் உறிஞ்சப்படுகின்ற நீர் ஆவியாகி மேலே செல்வதாலேயே மழைவீழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கின்றது. தெற்கிலுள்ள சிங்கராஜா காடுகள் போன்றவற்றில் காணப்படுகின்ற பெருமரங்களின் காரணமாகவே அங்கு மழைவீழ்ச்சி கூடுதலாகக் காணப்படுவதுடன், நீர்ச்சக்கர சுழற்சி முறையும் பேணப்படுகின்றது.

அளவுக்கதிகமான இரசாயன உரப்பாவனையால் நிலத்தடி குடிநீரில் நைட்ரேட்ஸ் அளவுக்கதிகமாகி நீர் குடிப்பதற்கு ஒவ்வாததாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எமக்குண்டு. கனிப்பொருட்களின் சுழற்சிக்கு தாவரங்கள் எவ்வளவு முக்கியமென்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். இரசாயன உரப்பாவனையைக் கட்டுப்படுத்தி இயற்கைப் பசளைகளை உருவாக்குவதற்கும் விறகுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மரங்களை உருவாக்க வேண்டியது எமது பாரிய பொறுப்பு. 

எமது வன்னிக் காட்டில் இருக்கும் காடுகள் பற்றிய கூகுள் படம் ஒன்றை அண்மையில் பார்க்க நேர்ந்தது. மன்னாரில் நானாட்டானில் இருந்து முல்லைத்தீவு வரையில் ஒரு கோடு கீறினோமானால் அந்தக் கோட்டின் நடுவில் பல இடங்களில் காட்டினுள் களவாக காட்டு மரங்கள் வெட்டப்பட்டு நிலமானது வெளியாக்கப்பட்டுள்ளதைக் கூகுள் படம் பளச்சென்று காட்டியது. யார் இதைச் செய்கின்றார்கள்? விலையுயர்ந்த காட்டு மரங்கள் எவ்வாறு கடத்திச் செல்லப்படுகின்றன? வன இலாகா அதிகாரிகளும் வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகளும் என்ன செய்கின்றார்கள்? ஏது செய்கின்றார்கள்? என்பதை நாம் அறிய முடியாமல் இருக்கின்றது. 

மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் திணைக்களங்கள், அரசியல் செல்வாக்குடன் தான் இந்தக் காட்டை அழிக்கும் கைங்கரியம் கைகூடி வருகின்றது. இந்த இடங்களில் எல்லாம் யாரைக் குடியமர்த்தப் போகின்றார்கள் என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.

காட்டின் நடுவே மொட்டையாக்கப்படும் இடங்கள் மீளவும் மரங்கள் வளர்த்துப் பாதுகாக்கப்பட வேண்டும். எமது வன இலாகா அலுவலர்கள் இனியாவது விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X