2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பரிஸ் தாக்குதலாளியாக்கப்பட்ட மொரோக்கோவின் அப்பாவிப் பெண்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் பெண்ணொருவர், பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மரணமடைந்திருந்தார்.

அங்கு உயிரிழந்தவர் எனக் கருதப்பட்டு, சில ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் காணப்படுபவர், உயிரிழந்தவர் அல்லர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் பெயர் ஹஸ்னா அய்ட் பௌலசென் என இனங்காணப்பட்டார். தற்கொலை அங்கியை வெடிக்க வைத்தே அவர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆணொருவரே அதை வெடிக்க வைத்ததாகப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் தொடர்பில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் சரியென்ற போதிலும், பின்னர் வெளியிடப்பட்ட தொடர்ச்சியான புகைப்படங்கள், அவருடையதல்ல என அறிவிக்கப்படுகிறது.

குளியலறையில் குளிப்பது போலவும், கட்டிலில் படுத்திருப்பது போலவும், நண்பர்களுடன் செல்பி எடுப்பது போலவும் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், மொரோக்கோவைச் சேர்ந்த நபிலா பக்கத என்பவருடையது என அறிவிக்கப்படுகிறது.
அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தனக்கும் ஹஸ்னாவுக்குமோ அல்லது பயங்கரவாத்துக்குமிடையிலோ, எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது எனவும், தானும் ஹஸ்னாவும் ஒரே மாதிரியாக இருப்பதன் காரணமாக, வேண்டுமென்றே தனது புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தனது 15 வயதில் பிரான்ஸில் வசித்த அவர், 2007ஆம் ஆண்டில் மொரோக்கோவுக்குத் திரும்பியிருந்தார்.
தனது நண்பியொருவரால் அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும், இருவரும் தற்போது ஒருவரோடு ஒருவர் கதைப்பதில்லை எனவும், தானும் ஹஸ்னாவும் ஒரே மாதிரியாக இருப்பதைப் பயன்படுத்திய அவர், அதை ஊடகவியலாளரொருவருக்கு விற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்களால், தனக்கு மனவுளைச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வெளியே செல்ல முடியாதுள்ளதாகவும், கடுமையான பயத்தின் கீழ் வாழ்வதாகவும் தெரிவித்தார்.

தற்போது மொரோக்கோவில் தனது குழந்தைகளுடன் வசிக்கும் நபிலா, அவரது கணவரை விவாகரத்துச் செய்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X