2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காலநிலை மாற்றம் இலங்கைக்கு சவால்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு நாடாகவும் அயன மண்டல நாடாகவும் காணப்படும் இலங்கையானது பாரியளவில் காலநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்றதொரு நாடு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரான்சின், பரிஸ் நகரின் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

விவசாயம், கடற்றொழில், கால்நடை வளங்கள், நீர், உயிரியல் பல்வகைமை, சுகாதாரம், மானிடக்  குடியேற்றங்கள், சுற்றுலாக் கைத்தொழில் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் வெப்பநிலை மாற்றம், மழை வீழ்ச்சி மற்றும் கடல் மட்டம் உயர்வடைதல் என்பன நேரடியாக பாதிக்கின்றன. 

வறட்சி, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியன காரணமாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் இலங்கை மக்களின் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்துகின்றன. 

தொழில்நுட்பத்தை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அறிமுகப்படுத்துவதன் ஊடாக அந்நாட்டு மக்களுக்கு வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப செயற்படும் ஆற்றலையும் அவற்றை குறைப்பதற்காக தேசிய ரீதியில் பொருத்தமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆற்றலையும் உறுதிசெய்ய முடியும்.
 
பூகோள பொருளாதாரத்தில் எமது தனிநபர் தூய்மை மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும் காலநிலை மாற்றங்களை குறைப்பதற்காக பூகோள ரீதியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் நாமும் பங்களிப்புச் செய்துள்ளதுடன் எதிர்காலத்திலும் பங்களிப்புச் செய்யவுள்ளோம். 

எமது நாட்டை நோக்குமிடத்து இலங்கையின் காலநிலைக்கு சாதகமான நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் நான் அறியத்தருகின்றேன்.

காலநிலை தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள இணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டை தேசிய ரீதியாக மேற்கொள்வதற்கு எண்ணியுள்ள பங்களிப்புக்கள்பற்றி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வரலாற்று ரீதியான பொறுப்பினை கருத்திற்கொண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளினால் மேற்கொள்ளப்படும் பூகோள ரீதியான பச்சை வீட்டு வாயு வெளியீட்டை பாரியளவில் குறைக்கும் தேவையுள்ளது.

பொதுவான கடமைகள் தொடர்பான எண்ணக்கருவை பின்பற்றும் தேவை எமக்கு இருந்தபோதும், இந்த நூற்றாண்டில் வெப்பத்தின் வளர்ச்சியானது இரண்டு பாகை செல்ஸியசிற்கு குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக எம்மிடம் பல்வேறு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆற்றல் நம்மிடம் காணப்படல் வேண்டும்.

பாரிஸில் நடைபெறும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டின் வெற்றியை எதிர்பார்க்கும் இலங்கை, பச்ச வீட்டு வாயு உமிழ்வினை பாரியளவில் குறைத்தல், பூகோள வெப்பம் மற்றும் முன் எப்போதும் இல்லாத காலநிலை மாற்றங்களின் பாதிப்பு என்பவற்றை குறைப்பதற்கான சட்ட ரீதியான இணக்கப்பாடுகளை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளது. 

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக இலங்கையின் இதயபூர்வமான எதிர்பார்ப்பாக பொதுநலவாய நாடுகளின் காலநிலை தொடர்பான செயன்முறையானது தற்சமயம் இடம்பெறும் இவ்வுரையாடலுக்கான பாலமாக அமையும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .