2026 மார்ச் 18, புதன்கிழமை

மூன்று இராஜதந்திரிகள் நாட்டுக்கு வருகின்றனர்

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சர்கள் இருவர் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஒருவர் ஆகியோர், எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், எதிர்வரும் புதன்கிழமை, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான புதுப்பிக்கப்பட்டஇராஜதந்திர உறவுகளை, மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவுள்ளது. 

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு, பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுண்ட்; நிதியை வழங்கி இருந்தது. 

குறிப்பாக, இலங்கையின் பாதுகாப்பு படையினரின் பயிற்சிகள் மற்றும் மறுசீரமைப்புக்காக இந்த நிதி வழங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான விசேட தூதுவர் ஒருவரையும் நியமித்திருந்தது. 

இந்த நிலையில், ஜெனீவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில், பிரித்தானிய இராஜாங்க அமைச்சரின் இந்த விஜயத்தின் போது பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பெப்ரவரி மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்திய - இலங்கை கூட்டு ஆணைக்குழு மாநாட்டில் சுஷ்மா, கலந்துகொள்வார் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுத்தவிர, இலங்கை - இந்திய மீன்பிடி பிரச்சினை மற்றும் இரு நாட்டு அரசியல், இராஜதந்திர உறவுகள் குறித்தும் சுஷ்மா சுவராஜ் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குறித்து அதிக அவதானம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 104பேரையும், எதிர்வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்வது தொடர்பில் அவர், பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X