2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு புதிய முனையம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 65 பில்லியன் ரூபாய் செலவில் புதியதொரு முனையம் (Terminal) அமைக்கப்படவுள்ளதென போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். 

தற்போதுள்ள முனையம் 6 மில்லியன் பயணிகளை மாத்திரமே கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளதாகவும் கடந்த வருடத்தில் இலங்கைக்கு வந்த 8.5 மில்லியன் பயணிகளை கையாள்வதற்கு, தற்போதுள்ள இடம் போதாது என்பதாலேயே இந்தத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சர்வதேச விமான நிலையங்களின் சேவையையும் கட்டடங்களையும் உயர்தரத்தில் பேணுவது முக்கியமானதொன்றாகும். இல்லையேல், சர்வதேச அளவில் சேவையை வழங்கி வரும் விமானங்கள், இலங்கைக்கு சேவையை வழங்குவதற்கு விரும்பாது' என்று அவர் கூறினார். 

மேலும், தற்போதுள்ள விமான ஓடு பாதையும் 200 மில்லியன் ரூபாய் செலவில் திருத்தப்படும் என்றும் அவர் கூறினார். அத்தோடு, 8 பில்லியன் ரூபாய் செலவில், புதியதொரு ஓடு பாதை அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்தல விமான நிலையம், நாட்டுக்கு மிகவும் முக்கிய சொத்தாகும் என்று கூறிய அவர், அந்த விமான நிலையம் குறைமாத பிள்ளை போல் உள்ளதாகவும்  அவர் கூறினார். 

'மத்தல விமான நிலையத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அங்கு இல்லை. அதனை நிர்மாணிப்பதற்காக வாங்கப்பட்ட கடனை அடைப்பதற்கான வருமானம் கூட அங்கிருந்து கிடைக்கவில்லை. இதனால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில், 2.5 பில்லியன் ரூபாய் பணத்தைக் கொண்டு, மத்தல விமான நிலையத்துக்கான கடனைச் செலுத்தி வருகின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .