Sudharshini / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வடிவேல் சக்திவேல்
தற்காலத்தில் தொழில் நிமிர்த்தம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது மிகவும் ஆபத்தான விடயமாக உள்ளது. வறுமையால் தமது பொருளாதார நிலையினை உயர்த்திக்கொள்ளவும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டும் குறிப்பாக தாய்மார்கள் வெளிநாடு செல்வதால் அவர்களின் பிள்ளைகள் அநாதரவாக்கப்படுகின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
கித்துள் பிரதேசத்தில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இதனால், 'பிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதுடன் துஷ்பிரயோகங்களுக்கும், உளவியல் ரீதியான உபாதைகளுக்கும், கலாசார சீரழிவுகளுக்கும் ஆளாகக் கூடிய நிலமைகள் காணப்படுகின்றன.
தாயொருவர், தந்தையின் அல்லது நெருங்கிய உறவினர்களின் பாதுகாப்பில் பிள்ளைகளை விட்டுச்செல்வதை எமது மாவட்டத்தில் அதிகமாக நாம் காண்கிறோம். இந்நிலமைகளில் உறவினர்களால் கூட சில பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர்' என்றார்.
'தரவுகளின்படி உலகிலுள்ள சிறுவர்களில் நான்கு சதவீதத்துக்கும் அதிகமானோர் உறவினர்களாலும் பதினொரு சதவீதமானோர் உறவினர் அல்லாத ஆனால் குடும்பத்துக்கு மிகவும் பரிட்சயமான நபர்களாலும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படகின்றனர். இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொடுப்பவர்களாக நாம் இருக்கக் கூடாது.
ஒரு சில முகவர்கள் எமது பெண்களை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி, தவறான செயல்பாடுகளில் ஈடுபட நிர்ப்பந்திப்பதாக தொடர்ந்தும் ஊடகங்களின் வாயிலாக அறிகின்றோம்' என தெரிவித்தார்.
'கடந்த காலங்களில் மத்திய கிழக்கு தொழிலுக்கு அனுப்புவதாக சொல்லி எமது பிரதேசத்தில் இருந்து ஒரு தாயையும் அவரது மகளையும் அழைத்துச்சென்று, தாயை வெளிநாடு அனுப்பிவிட்டு மருதானையில் உள்ள விடுதியொன்றில் மகளை அடைத்துவைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
ஆகவே, வறுமைக்கு ஒரே தீர்வு மத்திய கிழக்குதான் என்னும் எண்ணக்கருவை மாற்றி எமது பிரதேசங்களிலேயே வீட்டுத் தோட்டங்களை அமைத்தல், பண்ணை வளர்ப்புகள், தையல் என சிறு கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்ள எமது பெண்கள் முன்வரவேண்டும்' என்றார்.
'நல்லாட்சி அரசாங்கம் ஒன்றில் கையூட்டுகள் கேட்பதோ, கையூட்டுகள் கொடுப்பதோ தப்பான செயற்பாடாகும். இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை யார் செய்தாலும் மக்கள் விழிப்பாக இருந்து உரிய இடங்களுக்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி, உயர் அரச அதிகாரிகளாக இருந்தாலும் சரி.
உங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய பணியை ஆற்றுவதற்காகத்தான் அவர்களுக்கென அரசு ஊதியம் வழங்குகின்றது' என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .