Gavitha / 2016 மே 17 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.பி.மதன்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவிக்காலம், எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அவரது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், 2015ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் பிணை முறி வழங்கிய விவகாரத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளான ஆளுநர் மீது, பெரும் எதிர்ப்பலையொன்று உருவாகியிருந்தது. இந்த விவகாரத்தினால், நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்துக்கும் பல்வேறுபட்ட எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய கசப்பான அனுபவம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, எதிர்வரும் ஜூன் மாதத்தில் காலாவதியாகவுள்ள மத்திய வங்கி ஆளுநர் பதவியினை, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருக்குக் கொடுப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் நம்பகமாகத் தெரியவருகிறது.
வங்கித் துறையோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் அமைச்சரொருவருக்கே, குறித்த பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மிக முக்கிய அமைச்சுப் பதவியிலுள்ள குறித்த நபரது, நியமனத்துக்கு ஏகமனதாக அங்கிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மேற்படி தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல், வெகுவிரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .