2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மூலதனச் சந்தை அறிமுகம்: அரசாங்க கடன் பிணையங்கள்

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் தனது குறுங்கால மற்றும் நீண்ட கால நிதித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அரசாங்கத்தினால் வழங்கப்படும் திறைசேரிப் பிணையங்கள் அரச கடன் பிணையங்கள் எனப்படும். அவற்றை திறைசேரி முறிகள், திறைசேரி உண்டியல்கள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.

அரசாங்கத்தின் சார்பாக இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படு கடன் திணைக்களத்தினால் பிணையங்கள் மக்களுக்கு ஏல விற்பனை மூலம் வழங்கப்படுகின்றன.

திறைசேரி உண்டியல்கள் (Treasury Bills)

அரசாங்கமானது, தனது நானாவித செலவுகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் குறுகிய கால கடன் பிணையங்கள் திறைசேரி உண்டியல்கள் எனப்படும். இவை வாரந்தோறும் நடைபெறும் ஏலத்தின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும்.

திறைசேரி உண்டியலில் காணப்படும் விசேட பண்புகள்

திறைசேரி உண்டியல்கள் குறுகிய கால கடன் பிணையங்கள் ஆகும். அதாவது இவை ஆகக்கூடுதலாக ஒரு வருட முதிர்வு காலத்தை கொண்டவையாக காணப்படும். மேலும் இவை மூன்று வகையான முதிர்வு காலங்களை கொண்டிருக்கும்.

அவையாவன, மூன்று மாதங்கள் (91 நாட்கள்), ஆறு மாதங்கள் (182 நாட்கள்), பன்னிரெண்டு மாதங்கள் (364 நாட்கள்) போன்றனவாகும்.

எப்பொழுதும் திறைசேரி உண்டியல்கள் கழிவு விலையில் வழங்கப்படும். அதாவது பெயரளவு பெறுமதியை விட குறைந்த பெறுமதிக்கு வழங்கப்படும். இங்கு பெயரளவு பெறுமதியே முதிர்வு பெறுமதியாகவும் கருதப்படும். உதாரணமாக 100 ரூபாய் பெறுமதியுடைய ஆறு மாதத்தில் முதிர்வடையும் உண்டியலொன்று 90 ரூபாய் வழங்கப்படலாம். இங்கு முதலீட்டாளரது கொள்வனவு விலை 90 ரூபாய் ஆகும். முதிர்வு காலத்தில் அவர் பெறும் தொகை 100 ரூபாய் ஆகும். ஆறு மாத காலத்துக்கான அவரது வருமானம் 10 ரூபாய் ஆகும்.

திறைசேரி உண்டியல்கள் அரசாங்க உத்தரவாதத்துடன் வழங்கப்படுவதால் நட்ட அச்சமற்ற பிணையங்களாக கருதப்படும். அதாவது முதிர்வு காலத்தில் அதன் பெயரளவு பெறுமதியை வழங்க அரசாங்க உத்தரவாதம் காணப்படுவதால் ஆகும்.

திறைசேரி முறிகள் (Treasury Bonds)

அரசாங்கமானது, தனது நீண்ட கால அபிவிருத்தி திட்டங்களுக்கும், நீண்ட கால நிதித் தேவைகளையும் மேற்கொள்வதற்காக வழங்கப்படுகின்ற பிணைப்பத்திரமே திறைசேரி முறிகள் எனப்படும். பொதுவாக இவை ஒரு வருடத்துக்கு மேற்பட்ட முதிர்வு காலத்தை கொண்டிருக்கும். அண்மையில் அரசாங்கம் 30 வருட கால முதிர்வு கொண்ட முறிகளை வழங்கியிருந்தமையை இங்கு குறிப்பிடலாம். இவையும் உண்டியல்களைப் போன்று அரச பொதுப்படு கடன் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படுகின்றன.

திறைசேரி முறிகளின் சில முக்கிய பண்புகள் பின்வருமாறு

திறைசேரி முறிகள் நீண்ட கால அரச கடன் பிணையங்கள் ஆகும். உதாரணமாக 2,3,4,10,15,20,30 வருடங்களை முதிர்வு காலங்களாக கொண்ட பிணையங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

திறைசேரி முறிகளுக்கு நிலையான வட்டி வீதமெகன்று அரையாண்டுக்கொரு முறை வழங்கப்படுகின்றது. உதாரணமாக 10மூ வட்டி வீதத்தில் வழங்கப்பட்டுள்ள 100 ரூபாய் பெயரளவு பெறுமதியுடைய திறைசேரி முறி ஒன்று வருடத்துக்கு 10 ரூபாயை வட்டியாக பெற உரித்துடையதாகும். மேலும் இந்தப் 10 ரூபாயானது, அரையாண்டுக்கொரு முறை 5 ரூபாய், 5 ரூபாய் ஆக வழங்கப்படும். மேலும் முதிர்வு காலம் முடிவடையும் போது அரசாங்கம் அதனுடைய பெயரளவு பெறுமதியை செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளது.

திறைசேரி முறிகள் நீண்ட கால நட்ட அச்சமற்ற பிணையங்களாக கருதப்படுகின்றது. காரணம் அரசாங்கமானது வட்டி மற்றும் பெயரளவு பெறுமதியை வழங்குவதற்கு உத்தரவாதம் அளித்திருப்பதனால் ஆகும்.

திறைசேரி பிணையங்களுக்கு இரண்டு சந்தைகள் காணப்படுகின்றன. அவையாவன

1. முதலாம் தரச்சந்தை
2. இரண்டாம் தரச்சந்தை

முதலாம் தரச் சந்தை

அரசாங்கமானது பொது மக்களுக்கு பிணையங்களை விற்பனை செய்வதன் ஊடாக நிதியை திரட்டிக் கொள்ளும் சந்தையானது முதலாம் தரச் சந்தை எனப்படும். இம் முதலாம் தரச் சந்தையில் இலங்கை மத்திய வங்கியினால் அனுமதியளிக்கப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே பங்குபற்றலாம். அத்தோடு முதலாம் தரச் சந்தையில் பிணையங்களானது ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படும். முதலாம் தர வர்த்தகர்களது பிரதான தொழிற்பாடானது முதலாம் தரச் சந்தை ஏல விற்பனையில் பங்கு கொள்வதும் அத்தோடு இரண்டாம் தரச் சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்வதுமாகும்.

இரண்டாம் தரச் சந்தை

முதலாந்தரச் சந்தையில் ஏல விற்பனையின் மூலம் வழங்கப்பட்ட பிணையங்கள் முதலீட்டாளர்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்யபடும் சந்தை இரண்டாம் தரச்சந்தை எனப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .