2026 மார்ச் 12, வியாழக்கிழமை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சு.கவின் தாய்வீட்டுக்கு ஹூ... ஹூ...

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை கெட்டம்பே விஹாரைக்கு முன்பாக, கடந்த 28ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை நேற்றுத் திங்கட்கிழமை (01), கொழும்பை வந்தடைந்தது.

பாதயாத்திரை பயணித்த வீதிகளில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், கொழும்பில், நேற்று மாலைவேளையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

பாதயாத்திரை ஆரம்ப நாட்களில் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றாலும், இறுதிநாளான நேற்று, பெருந்திரளான மக்கள், பாதயாத்திரையுடன் கரங்கோர்த்துக்கொண்டனர்.

பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தவர்கள், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராகக்

கோஷங்களை எழுப்பியதுடன், 'தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்காதே', 'இராணுவ வீரர்களை, சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றுக்கு தாரைவார்க்காதே', 'நாட்டைப் பிளவுப்படுத்தாதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்;.

அவ்வாறு பயணித்த பாதயாத்திரை, ஒருகொடவத்தையை அண்மித்தபோது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதயாத்திரைக்கு ஆதரவளித்த மாகாண சபைகள், பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் கைக்கோர்த்துக்கொண்டனர்.

பேராதனையிலிருந்து கொழும்பை நோக்கி பாதயாத்திரை பயணித்த போது, பல்வேறு நீதிமன்றங்களினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பிரதான நகரங்களில் பெருமளவு வாகன நெரிசல்கள் ஏற்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிரானவர்கள், வீதிகளின் இருமருங்குகளிலும், எதிர்ப்புப் பதாதைகளை தொங்கவிட்டிருந்தனர். குடிநீருக்காகப் போராட்டம் நடத்திய போது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதனால், மூன்று உயிர்களை இழந்த, ரத்துபஸ்வலவைச் சேர்ந்தவர்கள், பாதயாத்திரையை வரவேற்பதற்காக தண்ணீர்ப் போதல்களை வைத்துகொண்டு காத்திருந்த விசேட அம்சமாகும்.

இவ்வாறான நிலையில், அந்தப் பாதயாத்திரையின் நிறைவில், கொழும்பு-2இல் உள்ள ஹைட்பார்க் மைதானத்தில் எதிர்ப்புக் கூட்டமொன்றையும் நடத்துவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த மைதானத்தை, கொழும்பு மாநகர சபை, திடீரென புனரமைப்புச் செய்தமையால், எதிர்ப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு மைதானம் கிடைக்கவில்லை. இந்நிலையில், எதிர்ப்பு கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்துவோமென, அவ்வணியினர் சூளுரைத்தனர்.

இந்நிலையில், எதிர்ப்புக் கூட்டத்தை பொரளை கெம்பல் மைதானத்தை பெற்றுக்கொடுக்க முடியும் என பொலிஸார், கடிதம் மூலம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் அதற்கான கடிதத்தையும் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ,  'நாங்கள் இப்போது (நேற்று) சகலதையும் தயார்படுத்திவிட்டோம்' என்று தெரிவித்து, கடிதத்தை மீளவும் கையளித்துவிட்டார்.

அந்த நேரம் வரையிலும், அந்த எதிர்ப்புக் கூட்டத்தை நாரஹேன்பிட்டியவில் உள்ள அபயராம விகாரையில் நடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது. கடிதம் கையளிக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஹான் ரத்வத்தை மற்றும் மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்நிலையில், எதிர்ப்புக் கூட்டத்தை எங்கு நடத்துவதென்று திணறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஏற்பாட்டாளர்கள், அப்பேரணியை கொழும்பு-லிப்டன் சுற்றுவட்டாரத்தில் நடத்துவதற்கு திடீரெனத் தீர்மானித்தனர்.

அதனடிப்படையில், பேரணியின் பயணவீதிகள் மாற்றப்பட்டன. அப்பேரணி, மருதானையில் திசைதிருப்பப்பட்டு, டாலி வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தின் முன்னால் வந்தபோது, ஹூ... ஹூ... என்று சிலர் சத்தமிட்டுள்ளனர்.

அந்த ஹூ சத்தத்துக்கு மத்தியில்,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகரான மஹிந்த ராஜபக்ஷ, தமது பேரணியை அழைத்துக் கொண்டு முன்னே நகர்ந்தார்.

'சிறிசேனவின் ஆப்பக் கடை', 'டாலி வீதி ஆப்பக் கடை' என்று, சிலரால் கோஷம் எழுப்பப்பட்டது. எனினும் அதனைக் கேட்டுகொண்டே மஹிந்த ராஜபக்ஷ, அமைதியாக பேரணியுடன் நடந்துச் சென்றார்.

பாதயாத்திரை, லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தன் பின்னர் அங்கு பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன். பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள், அரசாங்கத்துக்கு எதிரான குரலை உயர்த்தியதுடன், 'நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பாமல், நாங்கள் ஓயமாட்டோம்' என்று சபதம் எடுத்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .