2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேன் குரலாள் இனி பாடமாட்டாள்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எனக்கு வயதாகிவிட்டது. ஓய்வு தேவைப்படுகிறது. இனி நான் பாடப்போவது இல்லை” என்று அறிவித்துள்ளார் தேன் குரலுக்கு சொந்தக்காரியான பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி.

1957இல் "விதியின் விளையாட்டு" திரைப்படத்தில், தன் முதல் குரலை பதிவு செய்தவர் பாடகி எஸ்.ஜானகி. ஆனால் அந்தப்படம் வெளியாகமல் நின்றுபோனது. அதற்கு அடுத்து தெலுங்கில் எம்.எல்.ஏ., என்ற படத்தில் பாடினார்.தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடத் தொடங்கினார். மழலை கொஞ்சும் அவரது குரலின் இனிமையும், சிணுங்கும் அவரது ஹம்மிங் இன்றும் அவரது குரலில் ஒலித்து கொண்டு இருக்கிறது. இதுவரை சுமார் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

தமிழில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம் என்றாலும் அதிலும், மச்சான பாத்திங்களா...(அன்னக்களி), தூக்கம் உன் கண்களை...(ஆலயமணி), செந்தூரப்பூவே...(16 வயதினிலே), ஆயிரம் தாமரை மொட்டுகளே... (அலைகள் ஒய்வதில்லை), நான் ஆளான... (இது நம்ம ஆளு), ஒரு கிளி உருகுது (ஆனந்த கும்மி), கட்டி வச்சுக்கோ (என் ஜீவன் பாடுது), பேரைச் சொல்லவா (குரு), நேத்து ராத்திரி (சகலகலா வல்லவன்), இஞ்சி இடுப்பழகா (தேவர்மகன்), காதல் கடிதம் தீட்டவே (ஜோடி) உள்ளிட்ட பாடல்கள் பிரபலம்.

இந்நிலையில், இனி தான் பாடப்போவது கிடையாது என்று ஜானகி அறிவித்துள்ளார். தற்போது அவர் மலையாள படம் ஒன்றில் ஒரு தாலாட்டு பாடல் பாடியிருக்கிறார். இது தான் அவரின் கடைசிப்பாட்டு என்று கூறியுள்ளார்.

இதுப்பற்றி ஜானகி கூறியிருப்பதாவது... “நான் பல மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடிவிட்டேன். எனக்கு வயதாகிவிட்டது, இனி பாடுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன். சினிமாவில் மட்டுமல்ல மேடை நிகழ்ச்சிகளில் கூட இனி நான் பாட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

1938ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ஆம் தேதி, ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்தவர் எஸ்.ஜானகி. தற்போது இவருக்கு 78 வயதாகிறது. 2014ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷூடன் ‛‛அம்மா அம்மா... பாடல் பாடியிருந்தார். இந்த பாடல் அவ்வளவு உருக்கமாக இருந்தது. இந்த வயதிலும் இவரால் இப்படி பாட முடிகிறதே என்ன அனைவரையும் ஆச்சர்யம் கொள்ள வைத்தது.
சமீபத்தில் கூட ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படத்தில் “தந்தையும் யாரோ.. என்ற பாடலை பாடினார். இது தான் கடைசியாக ஜானகி தமிழில் பாடிய பாடல் ஆகும். எப்போதும் நான் ரசிகர்களுக்காக பாடிகிட்டே இருக்கணும்னு ஆண்டவனை வேண்டுகிறேன் என்று சொன்ன தேன் குரலுக்கு சொந்தக்காரான ஜானகி, இனி பாட மாட்டேன் என்று அறிவித்திருப்பது ரசிர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .