2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த?

Thipaan   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சித் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான தருணத்தை எதிர்பார்த்து மஹிந்த ராஜபக்ஷ காத்திருக்கிறார். 

புதிதாக உருவாக்கப்படவுள்ள கட்சியின் பெயர், சின்னம், நிறம் என்பன தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் ஆனாலும், அவை பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்துக் கொள்ளுமாறும் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. 

எது எவ்வாறாயினும், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் ஐ.தே.க யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில், மூன்றாவது பெரிய தரப்பாக களத்தில் குதிக்கவுள்ளது கூட்டு எதிரணி. 

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்குவது என்று கூட்டு எதிரணி எப்போதே அறிவித்து விட்டது. ஆனால் எந்தக் கட்சியில்? எந்தச் சின்னத்தில்? களமிறங்கப் போகிறது என்பதை அறிவிக்கவில்லை. 

கூட்டு எதிரணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏதாவதொரு கட்சியின் சின்னத்தில் அல்லது புதிய கட்சியை உருவாக்கி, அதன் சின்னத்தில் போட்டியிடும் தெரிவுகள் தான் மகிந்த அணிக்கு இருக்கிறது. 

கூட்டு எதிரணியில் மஹிந்த ராஜபக்ஷ இருந்தாலும், அதன் தலைவராக அவர் இல்லை. தினேஸ் குணவர்த்தன தான் தலைவராக இருக்கிறார். எனினும், மஹிந்த ராஜபக்ஷவை மையப்படுத்தியே அவரது ஆலோசனைகளின் படியே கூட்டு எதிரணி செயற்படுகிறது. 

எதற்காக மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிரணியின் தலைவராகச் செயற்படத் தயங்குகிறார்? ஏன் அவர் அதன் தலைமைப் பதவியை ஏற்கவில்லை? என்ற கேள்விகளுக்கான விடை இந்தப் பத்தியின் இறுதியில் கிடைக்கும். 

உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு எதிரணி போட்டியிடப் போகும் கட்சியின் பெயரையோ? சின்னத்தையோ? வெளியிட முடியாத நிலையில் தான் மஹிந்த அணி இருக்கிறது.  

புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதானால், இப்போது அது நடக்காது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் தான் புதிய கட்சிகளின் பதிவுகள் இடம்பெறும். அதனால், புதிய கட்சியையோ அதன் சின்னத்தையோ வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கலாம். 

புதிய கட்சி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடங்கப்படும் என்று விமல் வீரவன்ச போன்றவர்கள் கூறினாலும், புதிதாக உருவாக்கப்படும் கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கு எத்தகையதாக இருக்கும் என்ற கேள்விகள் இருக்கின்றன. 

இதுவரையில் கூட்டு எதிரணியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ, புதிதாக உருவாக்கப்படும் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வாரா என்ற சந்தேகங்கள் இருக்கின்றன. 

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றும் கனவு இருக்கிறது.  

மஹிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். புதிய கட்சியை உருவாக்குவதற்கு நாட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கின்ற உரிமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். 

ஆனாலும், புதிய கட்சி ஒன்றைத் தான் உருவாக்கப் போவதாகவோ, தனக்கு அத்தகைய உரிமை இருப்பதாகவோ கூறவில்லை என்பது கவனிக்கத்தக்க விடயம். 

அதாவது புதிய கட்சியை உருவாக்கும் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மிக நிதானமாகவே இருக்க முனைகிறார். தன்னை மையப்படுத்தியே புதிய கட்சியை உருவாக்கினாலும், அதனை விட்டு விலகி இருக்கவே ஆசைப்படுகிறார். 

மஹிந்த ராஜபக்ஷ ஏற்கெனவே பொது அரங்கில், சில வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். அதில் முக்கியமானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தான் பிளவுபடுத்த மாட்டேன் என்பதாகும். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே போய், தனிக்கட்சி தொடங்குவதன் மீது உள்ள நம்பிக்கையீனத்தினால் இந்த வாக்குறுதியை அவர் கொடுத்தாரா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தன்னைப் பிடித்து வெளியே தள்ளிவிடும் என்ற நம்பிக்கையில் இந்த வாக்குறுதியைக் கொடுத்தாரா? என்று தெரியவில்லை. 

மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியே வருவதற்கு நிறையவே பயம் இருக்கிறது. 

இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஐ.தே.கவில் இருந்து விலகி, புதிதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவைத் தவிர, வேறெவரும் கட்சியைப் பிளந்து, புதிய கட்சியை உருவாக்கி ஆட்சியைப் பிடித்த வரலாறு இல்லை. 

ஐ.தே.கவில் இருந்து காமினி திசநாயக்க, லலித் அத்துலத் முதலி போன்ற வலுவான தலைவர்கள் தனித்துச் சென்று, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்ற புதிய கட்சியை உருவாக்கினர். ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.  

அதிகாரத்தைப் பிடிக்க முடியாமலே லலித் அத்துலத் முதலி சுட்டுக் கொல்லப்பட்டார். வேறு கதியின்றி மீண்டும் ஐ.தே.கவில் இணைந்து, 1994 இல் சந்திரிகா குமாரதுங்கவை எதிர்த்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட காமினி திசநாயக்கவும் குண்டுத் தாக்குதலுக்குப் பலியானார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து காலத்துக்குக் காலம் பிரிந்து சென்றவர்களாலும் கூட,அரசியலில் நிலைத்து நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அரசியலில் மோசமான நிலையில் உள்ளவராக மஹிந்த ராஜபக்ஷ இல்லாது போனாலும், அதிகாரத்தைக் கைப்பற்றும் கனவு நிறைவேறாது போனால் எல்லாமே பாழாகி விடும் என்ற கலக்கம் அவருக்கு இருக்கிறது. 

மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகத் தனித்துச் செயற்படவும் முடியாமல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணங்கிச் செயற்படவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பதற்கு அவரது இந்தக் குழப்பமான மனநிலையே காரணம். 

தனதும், தனது குடும்பத்தினதும் அரசியல் எதிர்காலத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற தளத்தில் இருந்து மேலும் வளப்படுத்திக் கொள்ளலாம் என்பதில் மஹிந்தவுக்கு இன்னமும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. 

தற்போதைய சூழல் அதற்குச் சாதகமானதாக இல்லா விட்டாலும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னரேனும் தனக்கு வாய்ப்பான சூழல் உருவாகலாம் என்ற நப்பாசையும் நம்பிக்கையும் அவரிடம் இருக்கிறது. 

அந்த நம்பிக்கை தான், மஹிந்த ராஜபக்ஷவை இன்னமும் தனிக் கட்சியைத் தொடங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. தனித்து வெளியே சென்று விட்டால், தனதும், தனது குடும்பத்தினதும் அரசியல் எதிர்காலம் பாழாகி விடும் என்பதால்த்தான் அவர் ஆகக்கூடுதலான பொறுமையைக் கடைப்பிடிக்கிறார். 

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னைப் பிடித்து வெளியே தள்ளி விட்டால், அந்த அனுதாப அலையை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம், புதிய கட்சியை ஆரம்பித்தாலும் ஆதரவு அதிகம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். 

அதற்காக அவர் சுதந்திரக் கட்சித் தலைமைக்கு பலமுறை சவால் விட்டுப் பார்த்தார்; அதனுடன் முரண்பட்டார்; போட்டிக் கூட்டங்கள், பேரணிகளை நடத்தினார். ஆனாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையோ அவர் எதிர்பார்க்கும் முடிவை எடுக்கத் தயாராக இல்லை. 

மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்தைப் புரிந்து கொண்டு நழுவலாகச் செயற்பட்டு வருகிறார் மைத்திரிபால சிறிசேன. மஹிந்த ராஜபக்ஷவின் திட்டங்களை செயற்படுத்த விடாமல் மைத்திரிபால சிறிசேன தடுத்து வருகின்ற நிலையில், எப்படியாவது உள்ளூராட்சித் தேர்தலில் தனது பலத்தைக் காட்டி விட வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் ஆசையாக இருக்கிறது. 

உள்ளூராட்சித் தேர்தலில் பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றுவது கூட மஹிந்த ராஜபக்ஷவின் திட்டமல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்கடிப்பது தான் அவரது திட்டம். அதாவது ஐ.தே.கவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்தால், அதற்கான பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவே என்று அவரால் நம்ப வைக்க முடியும். 

தான் உள்ளே இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற கருத்தை, சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்படுத்த முடியும். அது சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வலுவான நிலையை அடைவதற்கு துணையாக இருக்கும். 

உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தனியாகப் போட்டியிடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தாலும், புதிய கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புக் குறைவு. 

ஏனென்றால், அவ்வாறு புதிய கட்சியை அவர் உருவாக்கினால், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அவரால் நுழைய முடியாது போகும். மஹிந்த மீண்டும் சுதந்திரக் கட்சியில் தொற்றிக் கொள்ளும் கனவில்த்தான் இருக்கிறார் என்றால், அவர் ஒருபோதும் புதிதாக ஆரம்பிக்கும் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் துணியமாட்டார். 

அந்தப் புதிய கட்சிக்காகப் பிரசாரங்களைச் செய்வார்; அதன் வெற்றிக்காகவும் பாடுபடுவார். எனினும், ஒருபோதும் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்கமாட்டார்.  

ஏனென்றால், அவ்வாறு தலைமைப் பதவியை மஹிந்த ஏற்றுக் கொண்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தளத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் வாய்ப்பை அவர் இழந்து விடுவார். 

எனவே, உள்ளூராட்சித் தேர்தல் மஹிந்தவின் அரசியல் நிலையை தெளிவாகவே எடுத்துக் காட்டப்போகிறது. அவர் எங்கே நிற்கப் போகிறார் என்பதை அதுவே வெளிப்படுத்தப் போகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .