2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புஸ்ஸல்லாவ இளைஞனின் மரணம்சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை

Gavitha   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

புஸ்ஸல்லாவ பொலிஸ் தடுப்புக்காவலிருந்தபோது இளைஞர் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனக்கோரி, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் மலையக சமூக ஆய்வு மையத்தினால், நேற்றுப் புதன்கிழமை (28) மகஜரொன்று கையளிக்கப்பட்டது.  

இது தொடர்பில், மேற்படி ஆய்வுமன்றத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை மா.சத்திவேலினால், குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“நீதிமன்ற உத்தரவுக்கமைய 2016.09.17ஆம் திகதி கைது செய்யப்பட்டு புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நடராஜா ரவிச்சந்திரன், 2016.09.17ஆம் திகதி இரவு, தனது ரீசேர்ட்டைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம், மனித உரிமை ஆர்வலர்களை மட்டுமன்றி நாட்டு மக்கள் மத்தியிலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பொது மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் நிலையத்திற்குள்ளே, இவ்வாறானதோர் சம்பவம் இடம்பெற்றமை, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கைச் சட்டத்தின் ஆட்சி, ரவிச்சந்திரன் சம்பவத்தில் தெளிவாகியுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்னர் அனுமதியின்றி கள் வைத்திருந்த குற்றத்திற்காக ரவிச்சந்திரன், புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார். அதற்குத் தண்டனையாக, பொது வேலையில் ஈடுபடுமாறு, நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதை மீறிய குற்றத்துக்காக, மீண்டும் நடராஜா ரவிச்சந்திரன், கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருக்கிறார். 

அடுத்த நாள் (2016.09.18) காலை ரவிச்சந்திரன், புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. சிறையினுள் தான் அணிந்திருந்த ரீசேர்ட்டைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ரவிச்சந்திரன் கைதுசெய்யப்படும்போது பொலிஸாரால் தாக்கப்பட்டார் என்று உறவினர்கள் கூறுகிறார்கள். அத்தோடு, பொலிஸ் நிலையத்தில் வைத்தும் தாக்கப்பட்டதை தான் கண்டதாக ரவிச்சந்திரனின் சகோதரர் கூறுகிறார்.  

பொலிஸார் நடத்திய தாக்குதலினால்தான் ரவிச்சந்திரன் கொல்லப்பட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தற்போது குற்றம் சுமத்துகிறார்கள். இதனைக் கண்டித்து புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றிரவே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் தலைமையகத்தால் இரு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். 

இது தொடர்பில், சுயாதீனமான ஒரு விசாரணை குழுவை ஏற்படுத்தி விசாரணை துரிதப்படுத்தப்படல் வேண்டும்.அத்துடன், ரவிச்சந்திரன் உயிரிழந்தமையுடன் தொடர்புடைய புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்படவேண்டும். 

ரவிச்சந்திரனின் உறவினர்களுக்கு முக்கியமாக அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டும். ரவிச்சந்திரனின் உடலை, தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதனை சுயாதீனமான சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மேற்கொள்ளவேண்டும். மேலும், ரவிச்சந்திரனின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படல்வேண்டும்” என, அந்த மகஜரினூடாகக் கோரப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .