2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பயங்கரவாதத் தடைச்சட்டம் மார்ச்சில் மாறும்; அச்சம் தேவையில்லை

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ்

இலங்கையில், ஜனநாயக ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பயங்கரவாதத் தடைச்சட்டமானது, அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் திருத்தியமைக்கப்படும் என்றும் கூறினார்.  

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலருக்கு எதிராக, குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதுடன், மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் அறிவித்தார்.  

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் தலைமையிலான குழுவொன்று, கடந்த வெள்ளிக்கிழமை, நியூசிலாந்தை அடைந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று (01), ஹொக்லேன்டில் உள்ள அரசாங்க இல்லத்தில் வைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அரச மரியாதை செலுத்தி வரவேற்பளிக்கப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தலைமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில், இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், நியூசிலாந்துப் பிரதமரும், இலங்கைப் பிரதமரும் இணைந்து கூட்டாக, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.  

இந்தச் சந்திப்பின் போது நியூசிலாந்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொடர்ந்து கூறியதாவது, 

“இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் மார்ச் மாதமளவில் மாற்றியமைக்கப்படும். அது குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை. 

லசந்த விக்ரமதுங்கவின் (சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்) சடலம் தோண்டியெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு மீண்டும் உட்படுத்தப்பட்டுள்ளது. றகர் விளையாட்டு வீரரின் (வசீம் தாஜுதீன்) சடலமும் தோண்டியெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை குறித்து, அச்சம் கொள்ளத்தேவையில்லை” என்றார்.  

கேள்வி நேரத்து முன்னதாக, கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டது. தொழில்நுட்பத்துறை, கல்வித்துறை, ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல், பாற்பண்ணை தொடர்பில் போதியளவான அறிவைப் பெற்றுக்கொள்ளல் பற்றிக் கலந்துரையாடினோம்” என்றார்.  

“இலங்கையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் நோக்கிலும் பாற்பண்ணைகளை தொழில்நுட்ப ரீதியில் தரமுயர்த்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிவகைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

நியூசிலாந்தில் பின்பற்றப்படும் நாடாளுமன்ற முறைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு முறைமை தொடர்பில், நாமும் கவனம்செலுத்தினால், அதற்கு நியூசிலாந்துப் பிரதமரும் இங்குள்ள (நியூசிலாந்து) நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்குவதற்குத் தயாராகவே இருக்கின்றனர்.  

1 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள், வாரத்துக்கு ஒரு குவளை (கிளாஸ்) பசும் பாலைக் குடிக்கவேண்டும். அதற்காக, எங்களுக்கு (இலங்கைக்கு) உதவுவதற்கு, நியூசிலாந்து முன்வருவதற்குத் தயாராகவே உள்ளது.  

ஜனநாயகமும் சமாதானமும் மலர்ந்துள்ள நாட்டில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதாக, இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, நியூசிலாந்துப் பிரதமர் உறுதியளித்தார்’ என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .