2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுவிஸ் அமைச்சருடன் சி.வி. சந்திப்பு

George   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

'இலங்கையில் இனரீதியான பாகுபாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகாவை யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (03) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'மாறிமாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், பாகுபாடுகளைத் தொடர்ந்து வந்தன. 1948ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் ஆட்சியில் நாம் சகலரும் சமமாக நடத்தப்பட்டோம். பரீட்சைகள் உள்ளிட்ட சகலவற்றிலும் நாம் சமமாக போட்டியிட்டோம். பாகுபாடு இல்லாவிட்டால் சமமாக எம்மால் போட்டியிட முடியும் என அவருக்கு கூறினேன்' என்றார்.

'எனினும், 1948ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர், இன ரீதியான பாகுபாடு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கல்வி தரப்படுத்தல்களால் தமிழ் மாணவர்கள் பலருக்கு, பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாது போனது. இவ்வாறான பாகுபாடுகள் தொடர்கின்றன என்பதை விளக்கினேன்.

இவ்வாறான பின்னணியில் கொண்டுவரப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உண்மையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படுவர் என்ற நிலைமைய பெரும்பான்மையினர் உறுதிப்படுத்தினால் அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்ற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அதேநேரம், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், இது இன்னமும் செய்யப்படவில்லை. நாட்டில் 17 பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் உள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறான சில சம்பவங்கள் குறித்து பதிவாகியுள்ளன.

முன்னரைவிட நாட்டில் நிலைமைகள் மாறியுள்ளன. தற்பொழுது ஜனநாயகம் உள்ளது. கலந்துரையாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தபோதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலிருந்து இளைஞர்கள் விடுவிக்கப்பட்டாலே தீர்வொன்று கிடைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமாகக் காணப்படுவதாகச் கூறினேன். யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் உள்ளனர். இவர்கள் தற்பொழுது ஓரளவுக்கு அடக்கி வைக்கப்பட்டுள்ள போதும், அவர்கள் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பிடித்து வைத்திருப்பதுடன், அதில் விவசாயங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனைக் கேட்பதற்காகவே கடந்த வாரம் நாம் பேரணியை நடத்தியிருந்தோம்.

நாம் நடத்தியிருந்த பேரணியானது அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல. அரசியல் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக சிவில் சமூக அமைப்புக்கள் இருப்பது வழமையானது. அவ்வாறானதொரு அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டியிருந்தனர் என்பதை அவருக்கு கூறினேன்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .