2026 மார்ச் 11, புதன்கிழமை

தொழிலாளர் போராட்டத்துக்கு த.தே.கூ ஆதரவு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் கோரும் தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய போராட்டமானது, நியாயமானது என்றும் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாகவும், நாடாளுமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை தெரிவித்த அக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறிதரன், அந்த மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாது, சம்பளக் கோரிக்கைக்கு கௌரவமான வகையில் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கிகரித்துக் கொள்வதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, சிறிதரன் எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,  

“நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தேயிலைத் தோட்டத் தொழில் செய்யும் மக்கள், தங்களது உரிமைக்காக தற்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 8ஆவது நாளாகவும், அம்மக்களின் சம்பளப் போராட்டம் தொடர்கிறது. ஆனால், அந்த போராட்டங்கள் பற்றி அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. போராட்டம் நடத்தினாலே இனவாதமாகப் பார்க்கப்படும் இன்றைய நிலையில், உண்மையில் இந்த போராட்டமானது அரசாங்கத்துக்கு எதிரானதல்ல. இது நாட்டுக்கு எதிரானதும் கிடையாது.  

நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கோரியே, இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளது சம்பள உயர்வுகள் தொடர்பான பிரேரணைகள், இங்கு கொண்டுவரப்படுகின்றன. ஆனால், நாளொன்றுக்கு 700 ரூபாயைக் கூடச் சம்பளமாகப் பெறமுடியாத சமூகமொன்று இருப்பது பற்றி, ஏன் கவனம் செலுத்தப்படவில்லை?  

உண்மையில், இன்றைய சூழ்நிலையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமொன்று வாழ்வதற்கு, நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் போதுமானதாக இருக்காது. இவ்வாறான நிலையில், மாதமொன்றுக்கு 11,680 ரூபாயை சம்பளமாக பெற்று எப்படி அவர்களால் வாழ முடியும்? 

ஆகவே, நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கையானது மிகவும் நியாயமானதாகும். அதை வழங்க வேண்டும். இவ்வாறானதொரு போராட்டம் நடத்தப்படுவது இந்த சபைக்கு தெரிய வேண்டும்.  

இந்த ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கை போராட்டத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி நாளை (இன்று வியாழக்கிழமை) அவர்களது ஆதரவை வெளிப்படுத்துள்ளனர். அந்த மக்களின் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாமும் ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம். அதை நியாயமான போராட்டமாக ஏற்கிறோம்.  

அந்த மக்களின் நியாயமான இந்த போராட்டத்தை ஜனநாயக ரீதியான போராட்டமாக ஏற்க வேண்டும். அதைவிடுத்து அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கை போராட்டத்துக்குக் கௌரவமான வகையில் தீர்வொன்று காணப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .