Niroshini / 2016 நவம்பர் 19 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில், மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்கு சென்று விகாரதிபதி சுமனரத்தின தேரரை சந்தித்து கலந்துரையாடி வந்தார். இதன்பிறகே மட்டக்களப்பு மங்களராமய விகாதிரபதி தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. ஆகவே இந்த இரண்டுக்கும் தொடர்பு உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் கூறினார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தன் பேஸ்புக் பக்க பத்தியில், “மட்டக்களப்பு சுமனரத்தின தேரர்-மஹிந்த-புலிகள்-மைத்திரி-நான்-தமிழ் மக்கள்” என்ற தலைப்பில், இன்று காலை அமைச்சர் கணேசன் மேலும் எழுதியுள்ளதாவது,
கடந்த 10ஆம் திகதி வரவு - செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட அன்று பிற்பகல் நாடாளுமன்ற உணவு விடுதியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேநீர் அருந்தியவாறு தனது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற என்னிடமும் அவர் உரையாடினார். என்னுடன் அமைச்சர் பழனி திகாம்பரமும் இருந்தார்.
“சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் நீங்கள் உரையாடுவது நன்று. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றியும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்கள மக்களை விரட்டியடிக்கும் ஒரு திட்டம் நடைமுறையாகிறது. அது பற்றி நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று மஹிந்த என்னிடம் கூறினார்.
“வட- கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக வாழ்வது எனக்கு தெரியும். அவர்களைப் பற்றிய அக்கறை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அண்மையில் இலங்கை வந்த சிறுபான்மையினர் தொடர்பாக ஐ.நா அறிக்கையாளர் ரீடா ஐசக்கிடம் தென்னிலங்கை சிறுபான்மையினர் போன்று, வட-கிழக்கில் வாழும் சிங்கள சிறுபான்மையினரையும் நீங்கள் சந்தித்தீர்களா என நான் கேட்டேன்” என நான் மஹிந்தவுக்கு பதில் சொன்னேன்.
உண்மையில் இந்நாட்டின் எந்த இடத்திலும் சிங்களவர்கள் மட்டுமே பெரும்பான்மை தமிழ் பேசுபவர்கள் எங்கேயும் சிறுபான்மைதான் என்ற பாரம்பரிய பேரினவாத நிலைப்பாட்டை தளர்த்தி, வட-கிழக்கில் வாழும் சிங்களவர்களை சிறுபான்மை என மஹிந்த ராஜபக்ஷ அடையாளப்படுத்தியுள்ளார். இதை இதற்கு முன் எங்கேயும் அவர் சொன்னதாக நான் அறியவில்லை. இதை அவர் எங்கேயோ சொல்லி அது திரிபுப்படுத்தப்பட்டு, என்னிடம் வந்து சேரவும் இல்லை. இதை அவர் நேரடியாக என்னிடம் கூறினார். எனவே, இது ஒரு முன்னேற்றக்கரமான நிலைப்பாடு என நான் நம்புகிறேன்.
இது ஒருபுறமிருக்க, மட்டக்களப்பு மங்களாராமய விகாரதிபதி சுமனரத்தின தேரர் எப்போதுமே ஒரு குழப்பக்காரர்தான். அவர் புதிதாக குழப்பம் செய்யவில்லை. அவரை மஹிந்த சந்தித்து, தனது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உசுப்பி விட்டுள்ளார். இதைதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .