2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தமிழ் பெண்களுக்கு பாலியல் துன்பம்: இராணுவம் மறுப்பு

George   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் பெண்கள் மீது இராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக நல்லிணக்க அலுவலகம் ஊடகங்களுக்கு வௌியிட்ட அறிக்கையை இராணுவம் மறுத்துள்ளது. 

2010ஆம் ஆண்டு வடக்கில் சிவில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினர் சிவில் நடவடிக்கைகளிலிருந்து விலகிவிட்டதுடன், நல்லிணக்க அலுவலகத்தால் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் முழுமையான பொய் என, இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இராணுவ வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் செயற்பாடுகளில் குற்றவாளிகளாக காணப்பட்டால், அவ்வாறானவர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தெரிவித்துள்ளது.

இது குறித்த இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இராணுவத்தினால் தமிழ் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் எனும் ஊடக அறிக்கையை இராணுவம் மறுக்கின்றது.

தேசிய நல்லிணக்க அலுவலகத்தின் பிரதான அதிகாரி தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி, இராணுவத்தினால் தமிழ் பெண்கள் பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று வெளியான ஊடக அறிக்கையை இராணுவம் முற்றாக மறுக்கின்றது.

2010 ஆம் ஆண்டு வடக்கில் சிவில் நிர்வாகம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவம் சிவில் நிர்வாக செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டது என்பதை சுட்டிக்காண்பிக்கின்றோம். இதற்கமைய, தற்பொழுது இராணுவம் எவ்வித  சிவில் நிர்வாக நடவடிக்கைகளையும் அங்கு மேற்கொள்ளவதில்லை. இந்நிலையில், நல்லிணக்க அலுவலக அதிகாரியினால் கூறப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான கருத்து அடிப்படையற்றதும் உண்மைக்கு புறம்பானதுமான குற்றச்சாட்டு என்பதை மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாலியல் தொடர்பான விடயங்களுடன் சம்பந்தப்பட்ட இராணுவ அங்கத்தவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

1971ஆம் ஆண்டு நடைபெற்ற பிரேமாவதி மனம்பேரி கொலை, 1995 – 2006 ஆம் ஆண்டு இடையிலான காலப்பகுதியில் நடைபெற்ற கிரிஷாந்தி குமாரசுவாமி மற்றும் வேலாயுதம்பிள்ளை கொலை போன்ற சம்பவங்கள் தொடர்பில், சிவில் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு நடவடிக்கைகளின் போது நீதிமன்றத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை இராணுவம் வழங்கியிருந்தது.

இதனால் இங்கு மேற்படி சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.        

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு ஒழுக்கத்தை மீறும் இராணுவ அங்கத்தவர்களுக்கு எதிராக, சிவில் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு  கிடைத்து,  நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர்கள், இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தி இராணுவ சேவையிலிருந்து அகற்றப்படுவார்கள்.

எமது இராணுவம் இது போன்ற சிறந்த கொள்கைகளை பின்பற்றிவருகின்ற நிலையில், மேலே கூறப்பட்டுள்ள செய்தியானது, தற்போதைய அரசாங்கம் சட்ட ஆட்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நேர்மையுடன் முயற்சிக்கும் இக்காலக்கட்டத்தில் இராணுவத்தின் நற்பெயர் மற்றும் நல்லிணக்கத் திட்டத்துக“கு முற்றுக்கட்டையாக அமையும்  என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” என இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .