2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

‘மெசெய்ல் புலியின் ஒப்புதல் சரியானது’

Princiya Dixci   / 2017 மார்ச் 06 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால், வில்பத்து சரணாலயத்தில் வைத்துச் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பாக, அவ்வமைப்பின் மெசெய்ல் பிரிவின் உறுப்பினர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய வாக்குமூலம் சட்டரீதியானது என, கம்பஹா மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வரணாதிபதி அறிவித்துள்ளார்.

 இந்த ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில், 2017 ஜனவரி 12ஆம் திகதி முதல் இடம்பெற்ற விசாரணையின் தீர்ப்பை நேற்று (06) அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு அறிவித்தார். 

இதேவேளை, அன்டனோவ்-32 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் மெசெய்ல் படையணியின் முன்னாள் உறுப்பினர்களான இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி, நேற்று (06) உத்தரவிட்டார்.  

புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பான வழக்கை, ஜனவரி 12ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதியன்று தீர்மானிக்கப்பட்டது. 

சம்பவம் இடம்பெற்று 17 வருடங்களுக்கு பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி, பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் பறந்துகொண்டிருந்த அன்டனோவ்-32, வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மெசெய்ல் (எறிகணை) தாக்குதலில் தலாவ வீரவெவ பிரதேசத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது. 

இதனால், ரஷ்யா விமானி மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 31 பேர் பலியாகினர்.  

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எறிகணை படையணியின் உறுப்பினர்களாவர். இருவருமே மார்ச் மாதம் 21ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X