2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை அகதியின் இதயம் ஹெலியில் பறந்தது

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம்,சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

ஹெலிகாப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு வைத்தியர்கள் எடுத்துச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 22) என்பவரின் உடலுறுப்புகளே இவ்வாறு தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 29ஆம் திகதி அடையாளம் என்ற கிராமத்தின் அருகே இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த கிருபாகரன், வேலூர் சிஎம்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில், நேற்று  மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரின் இதயத்தை சென்னை மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்தீஸ்கர்மாநில இளைஞனுக்கு பொருத்த முடிவானது.

அதன்படி, நேற்று  பகல் 3.30 மணியளவில் கிருபாகரனின் இதயம் அகற்றப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் அம்புலன்ஸ் மூலம் விஐடி பல்கலைக் கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு இதயத்தை எடுத்துச் சென்றனர்.

மேலும், கிருபாகரனின் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

ஒரு சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X