2026 மார்ச் 07, சனிக்கிழமை

'இரத்த மாதிரி ஒத்துபோகின்றது'

George   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“எனக்கு கையளிக்கப்பட்ட சாரத்திலிருந்த இரத்த மாதிரிகள், எதிரியினுடைய இரத்த மாதிரியுடன் ஒத்துபோனது. இதேவேளை சிறுமியின் இரத்த மாதிரியுடனும் அச்சாரத்திலிருந்த இரத்த மாதிரிகள் ஒத்துபோனது” என, மரபணு பரிசோதனை அதிகாரி, யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை, கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர் நெடுந்தீவு பொலிஸாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான சாட்சி பதிவுகள் யாழ்.மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை (06) இடம்பெற்றன.

இதன்போது, மரபணு பரிசோதனை அதிகாரி யாழ் மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னிடம் குறித்த வழக்கு தொடர்பில் 16 மாதிரி பொருட்கள் கையளிக்கப்பட்டன. சிறுமி மற்றும் எதிரியுடைய இரத்த மாதிரிகள், நீளமான காற்சட்டை, சிறுமியின் யோனியில் இருந்து எடுக்கப்பட்ட திரவம், 2 தலை முடி, பொலுத்தீன் பை போன்றன உள்ளடங்குகின்றன.

மரபணு பரிசோதனை மூலம் குற்றவாளி ஒருவரை கண்டறிய முடியும். இரட்டையர்கள் தவிர மற்றைய அனைவருக்கும் மரபணு நிச்சயம் வேறு வேறாகத்தான் இருக்கும். மரபணு மனிதருக்கு மனிதர் நிச்சயம் வேறுபடும்.

இந்நிலையில் எனக்கு கையளிக்கப்பட்ட சாரத்திலிருந்த இரத்த மாதிரி சந்தேக நபருடைய இரத்த மாதிரியுடன் ஒத்து போகின்றது. இதேவேளை, உயிரிழந்த சிறுமியினுடைய இரத்த மாதிரியும் சாரத்தில் காணப்பட்டது.

யோனியில் இருந்து பெறப்பட்ட திரவத்தில் விந்தை ஒத்த திரவம் காணப்பட்டது. ஆனால் அது தொடர்பில் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியவில்லை. அத்திரவத்தில் உயிரிழந்த சிறுமியின் கலங்களும் கலந்திருந்தமையால் அது தொடர்பில் பரிசோதனை முடிவுகளை தெளிவுபடுத்த முடியவில்லை. எனினும் சாரத்திலிருந்த இரத்த மாதிரி சந்தேக நபருடைய இரத்த மாதிரியுடன் ஒத்து போகின்றது என சாட்சியளித்தார்.

அடுத்தாக பல் நிபுணர் சாட்சியமளிக்கையில், “பல் அமைப்பு என்பது நிச்சயம் அனைவருக்கும் வேறு வேறாகவே காணப்படும். அது இரட்டையர்கள் ஆனாலும் வேறுபடும். சிறுமியினுடைய உடற்பகுதியில் இருந்து பெறப்பட்டு எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல் மாதிரியை சந்தேக நபரின் பல் மாதிரியுடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்த போது சந்தேக நபரின் பல் மாதிரியுடன் ஒத்து போகின்றது” என சாட்சியமளித்தார்.

இந்நிலையில் சந்தேகநபர் சாட்சியமளித்தார். இதன்போது, “சம்பவம் இடம்பெற்ற அன்று நான் இறைச்சி வாங்குவதற்கு சென்றபோது, சிறுமியை வீதியில் கண்டேன். அதன்பின்னர் இரவு 11 மணியளவில் வீட்டில் வைத்து நான் மது அருந்தியபோது, மக்கள் எனது வீட்டுக்கு வந்து என்னை அடித்து வீதிக்கு இழுத்து வந்தனர். அப்போது அங்கு வந்த பொலிஸார் என்னை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி என்னை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து எனக்கு காற்சட்டையும் டீசேர்ட்டும் அணிய தந்துவிட்டு நான் அணிந்திருந்த ஆடைகளை வாங்கிக்கொண்டனர்.

அதனை கொண்டு சென்று உயிரிழந்த சிறுமியின் உடலில் போட்டு விட்டு பின்னர் எடுத்து கொண்டு வந்துள்ளனர். அவ்வாறே எனது சாரம் சிறுமியின் உடலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச்சம்பவத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என தெரிவித்தார்.

இதனையடுத்து, “சாரம் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் இதுவரை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது எங்கேனும் தெரிவித்தீர்களா?” என, எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எனக்கு ஆதரவாக வாதாட சட்டத்தரணிகள் எவரும் முன்வரவில்லை. அத்துடன் நான் இதனை கூறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. எனவே நான் இதற்கு முன்னர் இதனை எங்கும் தெரிவிக்கவில்லை” என தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று  வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .