Princiya Dixci / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் ரயில்க் கடவை காப்பாளர்கள், நேற்று (10) முதல் காலவரையறையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால், கடவைகளை கடக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானதுடன் கடக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுவருடம் மற்றும் ஏனைய பண்டிகை காலங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்,சிற்றூழிர்களாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவேண்டும் அல்லது வீதி அதிகார சபையில் வீதி பரமரிப்பாளர்களாக இருக்கும் வெற்றிடத்துக்குத் தங்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதுவரையிலும் தங்களுடைய போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கடந்த 4ஆம் திகதி அறிக்கை வெளியிட்ட போதும் அரசாங்கத்தினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்தே, நேற்று (10) அதிகாலை 4 மணி தொடக்கம் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் பணிப் பகிஷ்கரிப்பையடுத்து ‘புகையிரதக் காவலாளிகள் வேலையில் இல்லை பொது மக்கள் கவனமாகச் செல்லவும்’ என, பொலிஸாரினால் அறிவுறுத்தல் பலகைகள் ரயில்க் கடவைகளில் தொங்கவிடப்பட்டுள்ளன.
“நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் மாதாந்தம் 7,500 ரூபாய் சம்பளத்துக்கு கடந்த 4 வருடங்களாக வடக்கு, கிழக்கில் 1,230 பேர் ரயில்க் கடவை காப்பாளர்களாக கட்டாயத்தின் பேரில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்” என்று வடக்கு, கிழக்கு மாகாண ரயில்க் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர். ஏஸ்.ஜே.ரொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.
“அரச, தனியார், தற்காலிக ஊழியர்கள் போன்ற எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி, அடிப்படைத் தொழில் சட்டத்துக்கு முரணான விதத்தில் கடமைகளைச் செய்துவருகின்றோம். பொலிஸார் எங்களை அடிமைகளாக நடாத்துகின்றனர்.
எங்களுக்கு ரயில்வே திணைக்களத்துக்குரிய நேர அட்டவணை வழங்கப்படாமல், ரயில் வருவதை அவதானித்து ஒரு பக்கக் கடவையை மூடி மற்றப்பக்கக் கடவையை மூடக் கூட நேரமில்லாத நிலையில், பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் பணியாற்றுகின்றோம்.
இவ்வாறு தற்காலிக கடமையாளர்களே என்று எந்தவிதமான எழுத்து மூலமான கடிதங்கள் கூட வழங்கப்படாமல் பணியாற்றிவருகின்ற நிலையில், எமக்கு சம்பள உயர்வு எதுவும் இல்லை. மருத்துவ லீவு இல்லை. மாதத்தில் 31 நாள் வந்தால் 30 நாளுக்கு மட்டும் தான் சம்பளம், இவ்வாறு மாதாந்தம் 7, 500 ரூபாய் சம்பளத்தில், பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் வாழ்கையை நடாத்திவருகின்றோம்.
தொடர்ந்து 180 நாட்கள் பணியாற்றினால் நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும். இருந்தும் இதுவரை எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. எனவே, எமது அடிப்படை உரிமைகளான எமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும்வரை பணிப்புறக்கனிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் இந்த பணிப்புறக்கனிப்பு வேளையில் புகையிரத பாதை கடவையால் பயணிக்கும் பொதுமக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .