2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமைச்சரின் வாகனம் மோதியதில் கர்ப்பிணி உட்பட நால்வர் படுகாயம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர

கெப் ரக வாகனமொன்று, மோட்டார் சைக்கிளொன்றை மோதியதில், கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்குள்ளாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் உள்ளிட்ட குழுவினர் பயணித்த கெப் ரக வாகனமே, குறித்த குடும்பத்தார் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியுள்ளதாக, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புத்தளம், ஆனமடுவ மஹஉஸ்வெவ ஏரிக்கருகில் 1 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இகினிமிபிட்டிய பலுகொல்ல வீதியில், நேற்றுத் திங்கட்கிழமை இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் தந்தை, 6 மாதங்க​ளையுடைய கர்ப்பிணித்தாய் மற்றும் பிள்ளைகள் இருவர் உள்ளிட்ட நால்வரையும் ஆணமடுவ வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், இரு சிறுவர்களை, மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

7 வயதுடைய ஹிருணிகா சத்சர மற்றும் 4 வயதுடைய கயந்த இந்துனில் என்ற சிறுவர்களே, படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அனுஷ்க பிரியதர்ஷன என்பவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி  அமைச்சுக்குரியது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .