Gavitha / 2017 மே 08 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, இன்னும் 24 மணிநேரத்தில் கலைக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல் தெரிவித்தது.
எனினும், இந்திப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 11ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்து, தேசிய வெசாக் வைபவத்தை ஆரம்பித்து வைப்பதுடன், ஏனைய சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில், அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவது உசிதமானது அல்ல என, அரசாங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆலோசனை கூறியுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.
ஆலோசகர்களின் ஆலோசனையால், அமைச்சரவை மாற்றமானது, போயா தினத்தன்று இடம்பெறாது என்றும், ஒருவாரத்துக்கு பின்னரே இடம்பெறும் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
தேசிய வெசாக் வைபவம் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இன்னும் சில வைபவங்களின் ஏற்பாடுகள், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் தலைமையிலான ஏற்பாட்டு குழுக்களினாலேயே முன்னெடுக்கப்படுகிறது.
அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது, மேற்குறிப்பிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சுகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயின், அந்த ஏற்பாடுகள் யாவுமே குழம்பிப் போய்விடும். ஆகையால், அமைச்சரவை மாற்றத்தை ஒருவாரத்துக்கு தள்ளிவைப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
அமைச்சரவை மாற்றத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வகிக்கும், அமைச்சுக்கள் பலவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாலம் என்றும் தெரியவருகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினர் அங்கம் வகிக்கும், அமைச்சுகளில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான விவரங்கள் அடங்கிய அறிக்கையை, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த வாரம் கையளித்துள்ளனர்.
அதனடிப்படையில், பெருந்தெருக்கள், மீன்பிடி, உயர்கல்வி, எரிபொருள்துறை, வெளிவிவகார மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுக்களில் மாற்றங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது இவ்வாறிருக்க, எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
அப்படியாயின், எதிர்வரும் ஒருவாரத்துக்குள் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படகூடிய சாத்தியகூறுகள் இருப்பதாக தெரியவருகியது.
எது எவ்வாறோ, ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன், ஜனாதிபதி மாளிக்கையில், ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை நடத்திய சந்திப்பின் போது, கூறப்பட்டவை போயா தினத்தன்றே அமுல்படுத்தப்படும் என்று அறியமுடிகிறது.
அரச நிறுவனங்களை செயற்றின்மிக்கனவையாக மாற்றுவதற்கு, பல நிறுவனங்களில் பதவிநிலைகளில் வெசாக் போயாவுடன் மாற்றங்கள் கொண்டுவரப்படும். அரச நிறுவனங்களை ஆளுமை நுட்பம் மற்றும் செயற்றிறன்மிக்கதாக மாற்றும் வகையிலேயே மாற்றங்கள் அமையும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, அரச பொறிமுறையில் மாற்றத்துடன், அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அன்றையதினம் பதிலளித்திருந்த ஜனாதிபதி வெசாக்கு முன்னர் மாறும் என்று தெரிவித்திருந்ததுடன், அதனோடு, எதிர்க்கட்சி மாறுமா? மாறாத என, தனக்குத் தெரியாது என்றும் பதிலளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இது இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனித்து ஆட்சியமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
இதேவேளை, அமைச்சரவை மாற்றத்தை காலம் தாழ்த்தாது மேற்கொள்ளுமாறு, சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தலைமையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கொழும்பில் உள்ள வீட்டில், இடம்பெற்ற முக்கியமான சந்திப்பின் போதே, மேற்கண்ட விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்ளான, டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரிய தர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி, டிலான் பெரேரா மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோரும் பங்கேற்றிருந்ததாக அந்த தகவல் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .