2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

'சிங்கராசா வழக்கை இரத்துச் செய்தால் சிக்கல் தோன்றும்'

Kanagaraj   / 2016 ஜூலை 15 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சிங்கராசா வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் ஊடாக இரத்துச் செய்யப்படுமாயின், அது சட்டமுறைமையில் சிக்கல்களை தோற்றுவிக்கும். அவ்வாறான நிலைமையொன்று உருவாகுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமையானது, தன்னுடைய மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தர்ஷன வேரவகே என்பவரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சிங்கராசா வழக்கின் தீர்ப்பை செல்லுபடியாக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், நாடாளுமன்றத்தில் வைத்தே சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏதாவது காரணத்துக்காக சிங்கராசா வழக்கின் தீர்ப்பு செல்லுப்படியாகும் என்று அறிவிக்கப்பட்டால் சட்டசிக்கல்கள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய மனுதாரர், அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின் அது அரசியலமைப்பின் 4(இ) பிரிவை மீறுவதாக அமையும்.

இந்த நிலைமையை தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு சட்டரீதியிலான உரிமை இருக்கின்றது. எனினும், அந்த நிலைமையை தடுப்பதற்கு ஜனாதிபதி இதுவரையிலும் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

ஆகையால், மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு கட்டளையிடுமாறும் தன்னுடையதும் நாட்டு மக்களினதும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் கோரியுள்ளார்.

சிங்கராசா வழக்கின் தீர்ப்பு 2005ஆம் ஆண்டு அன்றிருந்த பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் குழாமினால் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பாகும்.

சிங்கராசா வழக்கின் தீர்ப்பின் பிரகாரம்: சர்வதேச உடன்படிக்கை இணக்கப்பாட்டின் பிரகாரம் இலங்கையில் சட்டதிட்டங்கள் வழங்கப்படவில்லை. இலங்கைக்கென்று தனியான நீதிமன்ற செயற்பாடுகள் அல்லது சட்டவரையறை இருக்கின்றது என்பதனால், சர்வதேச சட்டதிட்ட ஒழுங்குகளுக்கு கீழ் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவரை விடுதலைசெய்ய முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,  நாவற்காட்டைச் சேர்ந்த நல்லரத்தினம் சிங்கராசா, 1993ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி, அதிகாலை 5 மணியளவில், அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வைத்து, பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டார்.

அவரது கிராமத்தில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் கைதுசெய்யப்பட்ட 150 பேரில், அப்போது 17 வயதான சிங்கராசாவும் ஒருவராவார்.

தனது 15ஆவது வயதில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்ட சிங்கராசா, அவர்களிடமிருந்து தப்பியோடி, தனது வீட்டில் வசித்து வந்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டிலேயே, அவர் கைது செய்யப்பட்டதோடு, கொம்மாதுறை இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அன்று மாலையில் மட்டக்களப்புப் பொலிஸின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு எதிரான பிரிவிடம் கையளிக்கப்பட்டு, மட்டக்களப்புச் சிறைச்சாலையிலுள்ள இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 17ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். தண்ணீர்த் தாங்கிக்குள் அமுக்குதல், கண்களை இறுக்கிக் கட்டுதல், தலைகீழாகத் தொங்க விடுதல் போன்றன அவரால் குறிப்பிடப்பட்ட சித்திரவதைகளாகும். சிங்களம் தெரியாத நிலையில், தனக்கு தமிழ் மொழிபெயர்ப்புக்கான வசதிகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் அவர், விசாரணைகளின் பின்னர், டிசெம்பர் 11ஆம் திகதி, சிங்களப் படிவமொன்றில் கையெழுத்திடுமாறு கோரப்பட்டதாகவும், தனக்கு மொழி தெரியாததன் காரணமாகக் கையெழுத்திட மறுக்க, கட்டாயப்படுத்தி கைவிரலடையாளம் பதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

1994ஆம் ஆண்டு செப்டெம்பரில், '1989ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மூதூரில் வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் ஆயுதப் பயிற்சி எடுத்தமை', 'அரந்தாவலவில் இராணுவ வீரர்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்தமை', 'அரசாங்கத்தைக் கவிழ்க்க முனைந்தமை', 'யாழ். கோட்டை, பலாலி, காங்கேசன்துறை, ஆனையிறவு ஆகிய இடங்களில் நான்கு இராணுவ முகாம்களைத் தாக்கியமை' உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், அவரும் இன்னும் சிலரும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர். பின்னர், 1995ஆம் ஆண்டு செப்டெம்பரில் 50 ஆண்டுகளுக்குச் சிறை வைக்கப்பட்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினால் 1999ஆம் ஆண்டு, அவரது சிறைத்தண்டனை 35 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. எனினும் தன்னை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக, விசேட விடுப்பை அவர் கோரிய போதிலும், 2000ஆம் ஆண்டு, அந்தக் கோரிக்கை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவிடம் அவர் முறையிட்டார். அது தொடர்பாக அவர் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகள், அதற்கான அரசாங்கத்தின் பதில்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, விடுதலை அல்லது மீள வழக்குத் தாக்கல் என்ற அடிப்படையில் அவருக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென, மனித உரிமைகள் செயற்குழு தெரிவித்தது.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, அதன் கட்டாயப்படுத்தப்படாத படிமுறைக்கும் உடன்பட்ட நாடு என்பதன் அடிப்படையில், இலங்கைக்கு இந்தக் கடப்பாடு இருப்பதாக அது அறிவித்தது. இது தொடர்பிலேயே, உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .