2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொடக்கநிலை வணிகங்களின் நிதிமூலங்கள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஜூலை 29 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தொழிலாளர் வளம் எப்படி செறிந்து உள்ளதோ ? அதுபோல, எதிர்காலத்தில் தொழில்தருநர் வளமும் அதிகரிப்பதற்கான சாதக தன்மையை தொடக்கநிலை வணிகங்கள் (Startups) ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, ஆசியாவில் தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பிப்பதற்கு மிகசிறந்த இடங்களில் ஒன்றாக இலங்கையும் உள்ளது.

அண்மைய காலத்தில் இலங்கையை நோக்கி படையெடுக்கும் அந்நிய முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் துணிகர வணிக செயலமர்வுகள், தொடக்கநிலை வணிகங்களுக்கான போட்டிகள் என்பன இலங்கையின் புதிய முயற்சிகளுக்கு உலகளாவிய ரீதியில் வரவேற்புள்ளதையும், அதற்காக நிறுவனங்களும், தனிநபர்களும் நிதியைக் கொட்டி வழங்கத் தயாராகவுள்ளதையும் எடுத்துக் காட்டுகின்றது.   

இலங்கை மக்கள் அடிப்படையில், துணிகரவணிக முயற்சிகளில் பின்நிற்பதும், தமக்கான சாதகமான நிலைகளில் (Comfort Zone) வாழ எத்தனிப்பதனாலும், தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பத்தில் தங்களைச் சந்தையில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன்காரணமாக, பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்கள், சொந்தச் சேமிப்பிலேயே ஆரம்பிக்கபடுகின்றன.  

இவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்ற தொடக்கநிலை வணிகங்கள், சொந்த முதலீட்டிலேயே தொடர்ச்சியாக வணிகத்தைக் கொண்டு நடத்துவது சாத்தியமற்றது. 

இந்நிலையில், சந்தையில் வெற்றிகரமாக இயங்கக்கூடிய தொடக்கநிலை வணிகங்கள், தங்களுடைய வணிகத்தை வெற்றிகரமாகக் கொண்டு நடத்தக் கூடியவகையில், மேலதிக முதலீடுகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் அறிந்திருப்பது அவசியமாகிறது.  

தற்போது மாற்றமடைந்து வருகின்ற வணிகச் சூழலுக்கு அமைய, பல்வேறு நிதியியல் நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தொடக்கநிலை வணிகங்கள், சந்தையில் வெற்றிபெறக்கூடிய புத்தாக்க சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றனவா? என்பதை அறிந்துகொண்டு, வணிகத்தை ஆரம்பிக்கும்போதே, நிதியுதவிகளை வழங்க முன்வருகின்ற சூழ்நிலை அமைந்திருக்கிறது. இதற்கு, முன்னைய காலங்களில் ஆரம்பித்து, வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தொடக்கநிலை வணிகங்களின் வெற்றியே முதன்மைக் காரணமாகும். 

அந்தவகையில், தமது புத்தாக்க முயற்சிகளுக்கும், தொடக்கநிலை வணிகங்களுக்கும் நிதியுதவிகளை எதிர்பார்க்கிறவர்கள் எங்கே, அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதைப் பார்ப்போம்.   

1. Lankan Angel Netw  ork   

இலங்கையில் ஆரம்பநிலையில் உள்ள தொடக்கநிலை வணிகங்களில், தேவதை முதலீட்டாளர்களையும் (Angel Investors) , தனிநபர் முதலீட்டாளர்களையும் முதலீடு செய்ய, இருசாராரையும் ஒன்றிணைக்கும் ஒரு தளமாக Lankan Angel Network (LAN) உள்ளது. இவர்கள் தனித்து முதலீட்டு வசதிகளை மட்டுமே வழங்காமல், தங்கள் முதலீடுகளைப் பாதுகாக்கத்தக்க வகையில், வணிக முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் (mentorship) வழங்கல் , புதிய வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொடுக்க வழி ஏற்படுத்தல் என்பவற்றுடன், வணிக முயற்சியிலிருந்து வெளியேறும் வரை, பொருத்தமான ஆலோசனைகளை வழங்கும் சேவைகளையும் வழங்குகிறது இந்த நிறுவனம். 

இலங்கையின், வெற்றிபெற்ற வணிக முயற்சியாளர்களின் தலைமைத்துவத்தில் நடத்தபடுகின்ற இந்த நிறுவனத்தில், நாம் நன்கு அறிந்த பல நிறுவனங்களும், முதலீட்டு உதவிகளைப் பெற்று உள்ளன.  

2. Crow  dIsland   

இலங்கையில் தொடக்கநிலை வணிகங்களுக்கு, புதுவகையில் முதலீடுகளைத் திரட்டி வழங்கவென உருவாக்கபட்ட தளம் இதுவாகும். இதில், நிதிதேவைப்பாடு உடைய முதலீட்டாளர்கள், தங்களுடைய வணிகம் தொடர்பிலான விடயங்களையும் முதலீட்டாளர்களுக்கான விடயங்களையும் குறித்த இணையத்தளம் வழியாக வழங்க வேண்டும். இதனை, ஆய்வு செய்யும் CrowdIsland நிறுவனத்தின் திறன்வாய்ந்த ஊழியர்கள், நம்பகத்தன்மை வாய்ந்த தொடக்கநிலை வணிகங்கள் தொடர்பிலான திட்டங்களைத் தங்களுடன் பதிவு செய்துகொண்ட முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இதன் மூலமாக, முதலீட்டாளர்கள் குறித்த தொடக்கநிலை வணிகங்களின் பங்குகளைக் கொள்வனவு செய்வதன் மூலமாக, நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும். தொடக்கநிலை வணிகங்கள், முதலீடுகளைத் திரட்டிக்கொள்ள வரையறுக்கப்பட்ட ஏதேனும் காலவரையறைகளை CrowdIsland கொண்டிருக்காமை விசேட தன்மையாகும். 

தொடக்கநிலை வணிகர்களையும் முதலீட்டாளர்களையும் இணைக்கும் ஒரு தளமாகச் செயற்படும் CrowdIsland, தனது தளத்தில் இணைந்து கொள்வதற்கு ஒரு நிலையான கட்டணத்தையும் முதலீடுகளைத் திரட்டி கொள்ளும்போது, அதில் குறித்த சதவிகிதத்தைத் தரகாகவும் பெற்றுக்கொள்ளுகிறது. இதற்கு மேலதிகமான சேவைகளைத் தொடக்கநிலை வணிகங்கள் பெற்றுக்கொள்ள மேலதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.  

3. Blue Ocen Ventures   

இந்த நிறுவனம், இலங்கையின் தொடக்கநிலை வணிகங்களின் முதலீட்டு தடங்கல்களை நிவர்த்திக்கவும் வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவெனவும் இலங்கை, சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இலங்கையில், மிக வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் பல்வேறு வணிகங்களும் இவர்களின் முதலீட்டு உதவிகளைப் பெற்றுள்ளன.  

பெரும்பாலும் 15 மில்லியன் தொடக்கம் 200 மில்லியன் வரை முதலீடுகளை மேற்கொள்ளத் தயாராக உள்ள இந்த நிறுவனத்தில் Prajeeth Balasubramaniam , Eric Wikramanayake, Rajan Anandan ஆகியோர் முக்கிய அங்கத்தவர்களாக உள்ளனர்.  

4. Angel.co   

Facebook , Tw  itter போன்ற சமூக வலைத்தளங்கள் போல, முதலீட்டாளர்கள்,  வணிக முயற்சிகளை ஒன்றிணைக்கும் ஒரு சமூக வலைத்தளமாக இது தொழிற்படுகிறது. எங்கே, மிகப்பெரும் பணமுதலைகளிடம் தங்கள் வணிகமுயற்சியை முதலீட்டை திரட்டல் என்கிற பெயரில் அடகு வைத்துவிடுகின்றோமோ என்கிற கவலை உள்ளவர்கள், இந்தத் தளத்தின் ஊடாக, தனிநபர் முதலீட்டாளர்களை அணுகி, எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தலையீடுகளும் இல்லாமல், முதலீடுகளைப் பெறமுடியும்.  

இலங்கையில் உள்ள முதலீட்டாளர்கள் தொடர்பிலான விவரங்களையும் அவர்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் தொடர்பிலும், குறித்த இணையத்தளத்தை அணுகுவதன் மூலமாகப் பெறக் கூடியதாக இருக்கும்.  

இவற்றுக்கு மேலதிகமாக, முதலீட்டு நிறுவனங்கள் இலங்கையின் தொடக்கநிலை வணிகமுயற்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, வருடந்தோறும் முதலீடுகளை, உட்பாய்ச்சல் செய்யவென வேறுபட்ட நிகழ்வுகளை நடத்துகின்றன. 

VENTURE ENGINE 

 கடந்த 2012ஆம் ஆண்டு முதல், தொடக்கநிலை வணிகங்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான பொருத்தமான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கவும் BOV Capital, Indian Angel Network ஆகியவற்றின் அனுசரனையுடன், மேலும் பலரையும் இணைத்துகொண்டு, இந்த நிகழ்வை நடத்துகிறார்கள்.  

அதுபோல, தற்போதைய நிலையில், இலங்கையில் தொடக்கநிலை வணிகங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், உதவி புரியும்பொருட்டும், Co-Working Places எனப்படும் தேவைக்கமைய தொழில்புரியும் இடங்களைத் தெரிவு செய்துகொண்டு, வணிகத்தைக் கொண்டுநடத்தும் முறையானது வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுகிறது. 

இதன்மூலமாக, வணிகங்களின் நிலையான செலவுகள் பெருமளவில் குறைக்கப்படுவதுடன், வணிகத்தின் நட்டநிலையும் குறைக்கப்படுகிறது. அதுபோல, Co-Working Places வழங்கி வருகின்ற நிறுவனங்களே, அங்கு அங்கத்துவம் பெறுகின்ற வணிகங்களில் முதலீடு செய்கின்ற நடைமுறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, வணிகங்கள் மிக இலகுவாக விரிவாக்கம் பெறுவதுடன், வணிகத்தை இலகுவாகக் கொண்டுநடத்தவும் உதவி புரிகிறது.   

இதுபோன்று, இலங்கையில் 2019ஆம்ஆண்டில் மாத்திரம் சுமார் 20க்கு மேற்பட்ட நிகழ்வுகள் தொடக்கநிலை வணிகங்களை மய்யப்படுத்தி நடத்தபட்டதுடன், வாரம்தோறும் அல்லது மாதாந்தோறும் வணிகமுயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் கூட்டங்களை நடத்தும் போக்கும் பிரசித்தம் பெற்றிருக்கிறது . 

இவை அனைத்துமே, இலங்கை மக்கள் தொடக்கநிலை வணிக முயற்சியாண்மை தொடர்பில் கொண்டுள்ள கருத்துகளில் மாற்றங்களை ஏற்படுத்துமென ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள். இதனால், புதிய வணிக முயற்சிகளின் உருவாக்கம் இடம்பெறுவதுடன், அவை வெற்றிகரமாகச் சந்தையில் நிலைகொள்ளவும் வழிவகுக்கும்.  

இலங்கை போன்ற நாடொன்றில், மிகச்சிறந்த புறமுதலீடுகளின்றி, வணிகத்தைக் கொண்டு நடத்துவது கடினமானதாகும். காரணம், மிகசிறந்த ஊழியர் படை, சந்தைபடுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கான செலவினங்கள் அதிகரித்து உள்ளநிலையில், தனியே சொந்தச் சேமிப்பை மாத்திரம் நம்பி, வணிகத்தை நடத்த முடியாது.

அதுபோல, வங்கிக்கடன்கள் தனியே நிதியைத் தருமே தவிர, முதலீட்டாளர்களின் திறனை அதன் மூலம் பயன்படுத்திக் கொள்ள முடியாது. எனவே, தொடக்கநிலை வணிக முயற்சியாளர்கள், எதிர்காலத்தில் உலகில் வெற்றிபெற்ற முதலீட்டாளர்களாக வலம்வர வேண்டுமாயின், தற்போதைய நிலையில் சிறந்த முதலீட்டாளர்களின் நிதியையும் திறனையும் பயன்படுத்திக் கொள்ளதத்தக்க வகையில், தங்கள் பங்குகளை வழங்கி, அவர்களை வணிகத்துக்குள் வரவேற்பது சரியானதே!   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .