2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காற்றில் கலந்த குரல்...

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

கருத்தம்மா திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் "போறாளே பொன்னுத்தாயி..." பாடலைப் பாடி தேசிய விருதினைத் தட்டிச் சென்றவர் பாடகி சொர்ணலதா. தனது இனிமையான குரலால் 23 வருடங்களாக ரசிகர்களை மயங்க வைத்த பாடகி அவர்.  ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் மூலை முடுக்கெங்கும் காற்றோடு கலந்து பரந்து விரிந்து கிடக்கின்றது.

கேரளா மாநிலம், பாலக்காட்டை பூர்வீகமாகக்கொண்ட சொர்ணலதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, பஞ்சாபி உட்பட பல மொழிகளில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை தந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தினைத் தக்கவைத்துள்ளார்.

இவரின் தந்தை கே.சி.செருகுட்டி, பிரபல ஹார்மோனியக் கலைஞர். தாய் கல்யாணி இசைப்பிரியர். கீ.போர்டு மற்றும் ஹார்மோனியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர் சொர்ணலதா. 1982ஆம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை திரைபடத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவினால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.

தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத்தட்டு", சத்திரியன் படத்தில் "மாலையில் யாரோ மனதோடு பேச...", கேப்டன் பிரபாகரன் படத்தில் "ஆட்டமா தேரோட்டமா", சின்னத்தம்பி படத்தில்  "போவோமா ஊர்கோலம்", "நீ எங்கே? என் அன்பே", என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே" போன்ற பாடல்கள் மிகப்பிரபலம் பெற்றவை.

தவிர "எவனோ ஒருவன் வாசிக்கிறான்"(அலைபாயுதே), "சொல்லாயோ சோலைக்கிளி" (அல்லி அர்ஜூனா), "குச்சி குச்சு ராக்கம்மா"(பம்பாய்), "உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி" (ஜெண்டில்மேன்), "அக்கடான்னு நாங்க" (இந்தியன்), "மாயா மச்சீந்திரா" (இந்தியன்), "அஞ்சாதே ஜீவா"(ஜோடி), "முக்காலா முக்காபலா" (காதலன்), "காதலெனும் தேர்வெழுதி"(காதலர் தினம்), "போறாளே பொன்னுத்தாயி" (கருத்தம்மா), "உளுந்து வெதைக்கையிலே"(முதல்வன்), "பூங்காற்றிலே.." (உயிரே), "ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு" (உழவன்), "காதல் யோகி" (தாளம்) உள்ளிட்ட ஏ.ஆர்.ரகுமான் இசையில் 35க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

அத்துடன், "மலைக்கோயில் வாசலில்"(வீரா), "மாடத்திலே கன்னி மாடத்திலே" (வீரா), "என்னுள்ளே என்னுள்ளே" (வள்ளி), "ராக்கம்மா கையத்தட்டு"(தளபதி), "உத்தம புத்திரி நானே" (குரு சிஷ்யன்), "நான் ஏரிக்கரை மேலிருந்து" (சின்னத்தாயி), "மாசி மாசம் ஆளான பொன்னு" (தர்மதுரை), "மணமகளே" (தேவர் மகன்), "ஆட்டமா தேரோட்டமா" (கேப்டன் பிரபாகரன்), "நீ எங்கே என் அன்பே" (சின்னதம்பி), "போவோமா ஊர்கோலம்"(சின்னதம்பி), "மாலையில் யாரோ மனதோடு பேச"(சத்ரியன்) உள்ளிட்ட இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களைத் தந்துள்ளார்.

தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த சொர்ணலதா, இதுவரையில் திருமணம் முடிக்காமலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் துன்பப்பட்டு  வந்த அவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றிருந்தார்.  

இவ்வாறானதொரு நிலையில், இன்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்ட நிலையில்,  சிகிச்சைக்காக சென்னை, அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி சொர்ணலதா உயிரிழந்தார்.  அவர் இன்று உயிருடன் இல்லாத போதிலும், அவருடைய குரல் இனிமையால் பிரபலம் பெற்ற பாடல்கள் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக எம்மோடு இணைந்திருக்கும்.


 


You May Also Like

  Comments - 0

  • A.Suresh Monday, 13 September 2010 02:07 AM

    இன்று இசை உலகுக்கு ஒரு ஈடுசெய்யமுடியாத கடினமான நாள்.ஸ்வர்ணலதா இவ்வுலகை விட்டு நீங்கினாலும். அவர் பாடிய பாடல்கள் என்றும் எப்போதும் நிலைத்திருக்கும்.அவரது மறைவினால் துயர் அடைந்ததுள்ள அவரது உறவினர்களுக்கு அவரது ரசிகனில் ஒருவனாகிய நான் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை பிராத்திப்போம்.

    Reply : 0       0

    jameel Monday, 13 September 2010 05:33 PM

    பின்னணி பாடிய சிறந்த முன்னணிப் பாடகி .

    Reply : 0       0

    msm niyaz Monday, 13 September 2010 07:33 PM

    வெரி சாட் நியூஸ். ilankai

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X