2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்க விரும்பவில்லை’

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 26 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சரித்திர ரீதியாக வட, கிழக்கில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களுக்கு அநீதியை இழைக்க விரும்பவில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்கு, கல்முனை நால்வர் கோட்டத்தில் நேற்று (25) நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“முற்றும் முழுதான தமிழ் மக்களின் அர்ப்பணிப்புடனே அதிகார அரசியல் தீர்வு கிடைக்கப்போகின்றது.  இதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் வாழ்ந்த தமிழ் மக்கள், அர்ப்பணிப்புகள், தியாகங்களை நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் செய்துள்ளனர்.

“புதிய அரசமைப்பு நாட்டுக்குத் தேவை என்பதை தென்பகுதி சிங்கள மக்களும் உணர்ந்து இன்று அதனை ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. அதேபோன்று, புதிய அரசமைப்பு ஊடாக தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமான ஏற்புடைய தீர்வு வர வேண்டும் என்பதை, முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

“புதிய அரசியலமைப்பிலே “எக்க இராஜ்ய” என்பது சொல்லப்பட்டுள்ள அதேவேளை,  அரசமைப்பில் “ஒற்றையாட்சி” எனும் சொல்லும் “யுனிட்டி” எனும் ஆங்கில சொல்லும் சொல்லப்பட்டுள்ளது. அச்சொல் இருக்காது. எக்க ராஜ்ய என்றே குறிப்பிடப்படும்.

“ஆனால், அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கப்படும். அதாவது, “பிரிபடாத பிரிக்க முடியாத ஒருமித்த நாடு” என்பதே அதன் பொருள்.  பிரதேச ரீதியாக நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் அதேவேளை, அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. மத்தியிலும் மாகாணத்திலும் முழுமையான அதிகாரம் பயன்படுத்தப்படும். இதுவே சமஸ்டியின் அடிப்படை அம்சங்கள்.

“இதன்மூலம் நாட்டில் சமாதானத்தை, சமத்துவத்தை, நல்லிணக்கததை ஏற்படுத்தாவிட்டால் நாடு பொருளாதாரத்தில் வெற்றி கொள்ள முடியாது. இந்த சந்தர்ப்பத்தை அனவரும் பயன்படுத்த வேண்டியது கடமை.

“இதனடிப்படையில், எதிர்பார்ப்பில்தான் எங்களில் நாங்கள் நம்பிக்கை வைத்து மற்றவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டிய அளவுக்கு நம்பிக்கை வைத்து இக்கருமத்தை முன்னேற வைப்பதற்கு முழுமுயற்சி எடுத்து வருகின்றோம்.

“புதிய அரசமைப்பு ஊடாக, மாகாண அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியாது. அதேவேளை, மத்திய அரசு மாகாண அதிகாரங்களை பயன்படுத்த முடியாததுடன், மீளவும் பெற முடியாது.

“அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துகின்ற சரங்களை  மத்திய அரசு தான் விரும்பிய பிரகாரம் மாற்றியமைக்க முடியாது. நிருவாக அதிகாரம் நமது கையில் இருந்தால் அப்படியான பல்வேறுபட்ட மாகாண அதிகாரங்களை மீளப்பெற முடியாத பயன்படுத்த முடியாத நிலை மத்திய அரசுக்கு இருக்குமானால் அதுவே சுயநிர்ணய உரிமை.

“இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

“அதேவேளை, கிழக்கிலே பிரிவினையை ஏற்படுத்த பல கட்சிகள் எத்தணிப்பதாக அறிகின்றோம். அவர்களிடம் ஒரு விண்ணப்பத்தை முன் வைக்கின்றேன். தயவு செய்து தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் கட்சிகள் விலகி நில்லுங்கள் என்பதை வினயமாக கேட்கின்றேன்.

“இதன்மூலம் அனைவரும் ஒற்றுமையாக வாக்களித்து,  இத்தேர்தலில் மூலம் நியாயமான நிரந்தரமான விசுவாசமான உறுதியாக அதிகாரப்பகிர்வைப் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்பதை எமது மக்கள் வெளியிட வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .