2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இராணுவ ஆட்சிக்கு வழிசமைப்பு’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்துகொள்வதற்கான எந்தவோர் ஆணையையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, பொதுமக்கள் வழங்கவில்லையெனவும் மஹிந்தவுடனுள்ள “கள்ளர் கூட்டம்”, இராணுவ ஆட்சியொன்றைக் கொண்டுவரவே விரும்புவதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.  

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதைக் காரணங்காட்டி, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில், முன்னாள் ஆட்சியாளர்களாக மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினர் களமிறங்கி உள்ளதாகவும், அவ்வாறானவர்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் இரண்டு, மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள விஜித ஹேரத் எம்.பி, அவ்விசாரணைகளை அடுத்து, அவர்களில் பலர், சிறைத் தண்டனை​களை அனுபவிக்க நேரிடுமென்றும் கூறியுள்ளார்.  

இவ்வாறான வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, சில தந்திரோபாய நடவடிக்கைகளில், மஹிந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனரெனக் குற்றஞ்சாட்டிய அவர், அவ்வாறானதொரு வலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அகப்பட்டுக் கொண்டுள்ளாரெனவும், இதற்காகவே இடைக்கால அரசாங்கமென்ற தூண்டில் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

2015 ஜனவரியில், மைத்திரிபால சிறிசேனவுக்குப் பொதுமக்கள் வாக்களித்தது, மேற்கண்டவாறான “கள்ளர்களுடன்” அரசாங்கம் அமைப்பதற்கன்றி, அவ்வாறான “கள்ளர்களுக்கு” எதிராக நடவடிக்க எடுக்கவேயெனவும், அந்தக் கள்ளர் கூட்டம், இராணுவ ஆட்சியொன்றைக் கொண்டுவரவே விரும்புகின்றதெனவும், விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .