2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வட மாகாணசபை கண்டனம்

Yuganthini   / 2017 ஜூலை 24 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வட மாகாணசபை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளது.  

இது தொடர்பாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  

நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், நீதிபதி இளஞ்செழியனை காப்பாற்ற முயன்ற அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு வடக்கு மாகாண சபை சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.   

நீண்டகாலமாக நீதிபதி இளஞ்செழியன் அவர்களது மெய்ப்பாதுகாவலராக இருந்து அவரை காப்பாற்றும் பணியிலேயே தமது உயிரை ஆகுதியாக்கிய அந்த பொலிஸ் அதிகாரிக்கும் எமது அஞ்சலியைத் தெரிவிப்பதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.   

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை முயற்சியானது எமது நாட்டினதும் யாழ்ப்பாண மாவட்டத்தினதும் நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படவேண்டும்.   

எமது பிரதேசத்திலே சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் நீதிபதி ஒருவரை கொலை செய்து ஏனைய நீதித்துறை சார்ந்தவர்களையும் அச்சுறுத்தி அராஜகத்தை இந்த மண்ணிலே நிலை நிறுத்துவதே இந்தக் கொலை முயற்சியின் நோக்கமாக இருக்கலாம்.  

அதிலும் நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்க ஒருவாரமே உள்ள நேரத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை இங்கு நிலவும் அமைதியான சூழலை குழப்பும் நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்பட வேண்டும்.   

இந்தக் கொலை முயற்சி மற்றும் கொலைச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டுமன்றி இந்தச் செயற்பாட்டின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யாவரும் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என்றும் நாம் கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .