2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’குறை கூறுவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது’

Editorial   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்களுக்கு எதனையும் செய்யாது தம்மைக் குறை கூறுவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தனகல்லையில் நேற்று  (02) இடம்பெற்ற இளைஞர் அணியுடனான கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

“எமது அரசாங்கத்தின் காலத்தில் இளைஞர்கள் நம்பிக்கையுடன் காணப்பட்டார்கள். இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு உள்ளிட்ட அவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கப்பட்டன.

“ஆனால் இன்றைய அரசாங்கம், ராஜபக்ஷ குடும்பத்தைக் குறை கூறுவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எந்தவோர் அக்கறையும் காட்டுவதில்லை.

“அரசியல் ரீதியாக புதிய பயணத்தைச் செல்வதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் நாடு முழுவதும் எமக்கான ஆதரவு பெருகி வருகிறது. இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாக, விரக்தியுற்றவர்களாக இளைஞர்கள் இருக்கிறார்கள்.

“நாம் தேர்தலுக்கு அஞ்சவில்லை. மக்கள் பலம் எமக்கு இருக்கிறது. நாம் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து அரசியல் ரீதியான புதிய பயணத்தைத் தொடரவுள்ளோம்.

“இந்த நாட்டில் 30 வருடகால யுத்தம் இருந்தது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவர பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாம் மிகத் துரிதமாக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தோம். நாட்டு மக்கள் உணரக்கூடியதாக அபிவிருத்திகளை மேற்கொண்டோம். அவ்வாறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும்போது நாம் பிரதேச ரீதியான பிரிவினைகளைப் பார்க்கவில்லை.

ஹம்பாந்தோட்டையில் எவ்வாறு வீதி அபிவிருத்திகள் இடம்பெற்றனவோ, அதேபோல பருத்தித்துறையிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதைய அரசாங்கம் அபிவிருத்திகள் எதையும் செய்யவில்லை. வரவு - செலவுத் திட்டத்தில் கூட மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .