2024 மே 02, வியாழக்கிழமை

சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மீண்டும் நியாயப்படுத்துகிறார் ஜனாதிபதி

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தமை, நாடாளுமன்றத்தைக் கலைத்தமை ஆகியவற்றை, நியாயப்படுத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பாக நேற்று (11) முன்னிரவு உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான், தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியேற்பட்டது எனத் தெரிவித்தார்.

ஆனால், அவரது நடவடிக்கைகள், அரசமைப்பு முரணானவை என, பெரும்பான்மையான சட்ட நிபுணர்களால் குறிப்பிடப்படும் நிலையில், அவ்விமர்சனங்களுக்கான பதிலை அவர் வழங்கியிருக்கவில்லை.

இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட பின்னர், நாட்டு மக்களுக்கு மூன்றாவது முறையாக உரையாற்றுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஆற்றிய முதலாவது உரையாகவும் இது அமைந்திருந்தது.

“தற்போதைய அரசியல் நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் வகையில், 14 நாள்களுக்குள் உங்கள் முன் நான் உரையாற்றும் மூன்றாவது முறை இதுவாகும். முதலாவதாக, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து, எனது கருத்துகளை நான் முன்வைத்தேன். அதேபோன்று நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி, பத்தரமுல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது, இரண்டாவது தடவையாக அரசியல் நிலைமைகளை உங்களுக்குத் தெளிவுபடுத்தினேன். இன்று மூன்றாவது முறையாக, உங்கள் முன் உரையாற்றுகின்றேன். இதன் முக்கியத்துவம் யாதெனில், இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னர் உங்கள் முன் உரையாற்றுவதாகும். குறிப்பாக மிகச் சுருக்கமாகவேனும், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

“நமது நாட்டில் நாடாளுமன்ற சம்பிரதாயம், அதாவது இலங்கை நாடாளுமன்றம், இலங்கை தேசிய அரச பேரவை காலம் முடிவடைந்ததன் பின்னர், 1947இல் முதலாவது நாடாளுமன்றம் ஆரம்பமானது. அன்று முதல் இன்று வரை, பொதுத் தேர்தல்களுக்கமைய அரசாங்கங்கள் மாற்றப்பட்டு, புதிய அரசாங்கங்கள் பதவியேற்று, இந்த நாட்டின் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக, தற்போதைய நாடாளுமன்றத்தின் நிலைமை, கடந்த வாரமளவில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒழுக்கத்தன்மையின் அடிப்படையிலும் நன்னடத்தைமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புமிக்க நாட்டின் உன்னத ஸ்தானமும் மக்களின் இறையாண்மையை வெளிப்படுத்தும் மிக உயரிய ஸ்தானமுமாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி, 100 மில்லியன் ரூபாய் முதல் 150 மில்லியன் ரூபாய் வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாயாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது.

“நம் நாட்டின் நாடாளுமன்றத்தினுள் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், மாற்றங்கள் பற்றிய அனுபவத்தை நாம் பெற்றிருக்கின்றோம். 1964ஆம் ஆண்டு, லேக் ஹவுஸ் சட்டத்தை எதிர்க்கும் வகையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றம் இச்சமயம் எனது ஞாபகத்துக்கு வருகின்றது. அதன் மூலம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுத்தது. ஆயினும் 47 முதல் இதுவரையிலான காலப்பகுதியில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றங்கள், ஊழல் காரணமாகக் கலைக்கப்பட்டதாக அறிவதற்கில்லை.

“2015ஆம் ஆண்டு மத்திய வங்கிக் கொள்ளை, அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அவற்றுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கியதை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு, அரசியல் நிலைமை சூடுபிடித்த பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது. அது மிகவும் வருந்தத்தக்கதோர் நிலைமையாகும்.

“உங்களது மதிப்புக்குரிய வாக்குகளைப் பெற்று, இந்த நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கும் பிரதிநிதிகள், தமது வணிகப் பெறுமதியை அல்லது ஒரு விலையை நிர்ணயிப்பது, எந்தளவுக்கு அரசியல் ரீதியில் மோசமான துரதிர்ஷ்டமான நிலையாகும் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் இதுவே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

“நாடாளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்த இரண்டாவது காரணி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அதிசயமான செயற்பாடாகும். அவரின் செயற்பாட்டையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன். அவர் எனது மிகவும் நெருங்கிய நண்பராவார். நம் நாட்டு நாடாளுமன்ற சம்பிரதாயத்தினுள் நியமிக்கப்பட்ட சபாநாயகர்கள், அவர்களது நடுநிலைத் தன்மையையும் பக்கச்சார்பின்மையையும் மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி வந்தார்கள். அந்த நிலைமை, 1947 முதல் இதுவரை இருந்து வந்தது.

“நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை, நாடாளுமன்றத்தின் சம்பிரதாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது, ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரங்களுக்கமைய பிரதமரை நியமித்ததை ஏற்றுக்கொள்ளாத தன்மையை ஏற்படுத்தி, சபாநாயகரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் அவரது நடத்தையும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான இரண்டாவது காரணமாக அமைந்ததென்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

“இங்கே, அரசியல் ரீதியான ஒரு நிலைமையைக் கவனத்தில் கொள்ளும் வகையில், உங்களது ஞாபகத்துக்கு இவ்விடயத்தையும் கொண்டுவர விரும்புகிறேன். 2015 ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின்னர், அதற்கு மறுநாள் ஜனாதிபதியாக நான் பதவியேற்ற மறுகணமே, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் அமர்த்தினேன். அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களில் 225 பேரில் 162 உறுப்பினர்களின் பலம் இருந்த தி.மு.ஜயரத்னவை நீக்கிவிட்டே, 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் அமர்த்தினேன். இந்த நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

“அச்சமயம், இன்று பலரும் பேசுகின்ற நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பற்றி எவரும் பேசவில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள். பெரும்பாலும், ஜனாதிபதியால் நம்பிக்கை வைக்கத்தக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை வெல்லத்தக்க நாடாளுமன்ற உறுப்பினரொருவரை, அரசமைப்பில் காணப்படுகின்ற உடன்படிக்கைகளுக்கு அமைய நியமிப்பதே சம்பிரதாயமாகும். அவ்வாறு நியமிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான நிலையியற் கட்டளை, அரசமைப்பின் சட்ட திட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும்.
“இருப்பினும், பிரதமரொருவரை நியமித்து, நாடாளுமன்றத்துக்கு அவர் செல்லும் முதல் தினத்திலேயே, அவர் மீதான நம்பிக்கை இருக்கின்றதா என்பதை பற்றிய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு, எமது நாடாளுமன்ற சம்பிரதாயத்தில் ஒருபோதும் நடந்ததில்லை. நிலையியற் கட்டளைகளுக்குக் கீழும் அவ்வாறு நடப்பதில்லை.

“இருப்பினும், நாடாளுமன்றத்தின் அச்சம்பிரதாயத்தை மீறி, கரு ஜயசூரிய, இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். அவரது முதலாவது அறிக்கையில், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக ஏற்று, அவருக்கான உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் நாடாளுமன்றத்தில் பெற்றுத்தருவதாக அறிவித்தார்.

அதாவது, நாடாளுமன்றத்தில் பிரதமருக்குரிய ஆசனம், நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான அலுவலகம் ஆகியன பெற்றுத்தரப்படும் என, முதலாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதற்குச் சில தினங்களின் பின்னர் வெளியிட்ட இரண்டாவது அறிக்கை, முதலாவது அறிக்கையை விட முற்றிலும் வேறுபட்டவோர் அறிக்கையாக அமைந்தது. அதன்மூலம் அவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இந்த நிலைமையைக் கவனத்திற்கொண்டு ஏற்படும் நிலைமையைப் பற்றி, நான் மிகுந்த கவனத்தைச் செலுத்தினேன். அத்தோடு, இரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஊடகங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
“14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் பட்சத்தில், பாரிய மோதலொன்று ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் மரணிக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள்.
அதை அவ்வாறு நடக்க விட்டிருப்பின், 14ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டி, அதனைக் கலைக்காது அந்த மோதலை உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்தத் தாய்நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் மோதல்கள் ஏற்பட்டு, நாட்டில் சாதாரண சிவில் மக்களுக்கிடையிலான மோதலாக பாரதூரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்தேன்.

“ஆகையால், இதற்கான சிறந்த தீர்வாக, 225 பேருக்கிடையிலான மோதல், நாடு தழுவிய ரீதியிலான பாரிய மோதலாக மாறி, இயல்பு நிலை சீர்குலைவதற்கு வழிவகுப்பதற்குப் பதிலாக, எனது பொறுப்புக்கும் கடமைக்கும் ஏற்ப ஜனநாயகத்தை மிக உயர்வாக மதித்து, சுதந்திரமான நியாயமான தேர்தலொன்றின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும், நாட்டின் வாக்குரிமை பெற்றிருக்கும் 150 இலட்சம் வாக்காளர்களிடம் அவ்வதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதும், அதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்ட ஊழல்மிக்க தன்மையையும் சபாநாயகரின் செயற்பாட்டால் ஏற்பட்ட முரண்பாடான நிலைமையின் உருவாக்கமுமாகிய அனைத்தையும் கருத்திற் கொண்டு உருவாகிய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய, மிகவும் சிறந்த ஜனநாயக ரீதியிலான நியாயமான தீர்வாக, அப்பொறுப்பைப் பொதுமக்களிடம் கையளிப்பதன் மூலம், ஜனநாயகத்தின் உயரிய நோக்கங்களை அடையும் வகையிலேயே நான், நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை நடத்தத் தீர்மானித்தேன். அதன்மூலம், இப்போது ஏற்பட்டிருக்கின்ற இப்பிரச்சினைக்குத் தெளிவான நிலையான தீர்வு, பொதுத்தேர்தல் மூலம் கிடைக்கப்பெறும் என்பதை இங்கு கூறவேண்டும்.

“இதன்போது, பொதுத் தேர்தலை நடத்தும் முழுமையான அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது. ஆதலால், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாம், எமது முழுமையான தேவையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். தேர்தல் சட்டதிட்டங்களைப் பாதுகாத்து, நாட்டில் தேர்தல் ஆணைக்குழுவால் ஜனநாயக ரீதியிலான நியாயமான நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு, நாம் அனைவரும் நமது உயரிய ஒத்துழைப்பை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் பொலிஸ் உள்ளிட்ட முப்படையினருக்கும் பெற்றுக் கொடுப்போம் என்ற வேண்டுகோளை, மிகுந்த கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் உங்களுக்கு விடுக்க விரும்புகின்றேன்.

“நாம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்போம். அதேபோன்று, ஊழல் மிக்கவர்களை அகற்றி, அரச நிர்வாகத்துக்காகத் தூய்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது, மதிப்புக்குரிய உங்களது பொறுப்பாகும். குறிப்பாக, ஜனநாயக அடிப்படையில் மக்களின் கருத்துக்குத் தலைவணங்கி, பொதுத் தேர்தலை நடத்துவது அனைவராலும் பாராட்டப்படும் ஒரு முடிவாகும் என்றே நான் கருதுகின்றேன்.

“நாட்டின் முக்கிய பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவு, சுபீட்சமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், உள்நாட்டு உற்பத்திகளை கட்டியெழுப்புதல், தூய்மையான வெளிநாட்டு முதலீடுகளை ஊழலின்றிப் பெற்றுக் கொள்ளுதல், ஒழுக்கமும் நன்னடத்தையும்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல், ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல் ஆகிய அனைத்துக்கும், இத்தேர்தலை நடத்தி உங்களது தீர்மானத்துக்கு அமைய புதியதோர் அரசாங்கத்தை அமைப்பதே ஆகும். ஆகையால் எமது அன்புக்குரிய தாய்நாட்டைப் புதிய பாதையில் நாம் கொண்டு செல்வோம்.

“இன்று இந்த நாட்டில் வாழ்பவர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும், புதிய தொழிநுட்ப உலகில் ஒழுக்கமிக்க நமது பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அறிவை முதன்மைப்படுத்திய ஒரு சமூகத்தையும் அறிவும் ஆற்றலுமிக்க அனுபவமிக்க அரச நிர்வாகிகளையும் தேர்ந்தெடுப்பதற்கு, உங்களுக்கு மிகச் சிறந்ததொரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.

“ஆகையால், தேர்தலை நடத்தும் வகையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தேர்தல் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானங்களுக்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்போம். இத்தருணத்தில் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில், எமது முன்னைய அனுபவங்களையும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதற்கு ஏதுவாக அமையும் காரணங்களைப் பற்றியும் இங்கு நான் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

“குறிப்பாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்காகவும் வேட்பாளர்களினதும் தேர்தல் செயற்பாடுகளுக்காகவும், அரச உடைமைகளைத் துஷ்பிரயோகம் செய்வதை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளுதல், அரச வாகனங்களை உபயோகப்படுத்துவதை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளுதல், கடந்த அரசாங்கத்திலும் தற்போதைய காபந்து அரசாங்கத்தில் செயலாற்றும் தற்போதைய நிலைமையிலும் அந்தந்த அமைச்சுகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்காக வாகனங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“தற்போதைய அரசமைப்பின் 19வது திருத்தத்தின் கீழ், காபந்து அரசாங்கம் என்ற வகையில் வேட்புமனுத் தாக்கல் பற்றிய அறிவித்தலிலிருந்து நாடாளுமன்றம் கூடும் வரையிலான காலப்பகுதியில் அமைச்சரவை, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட காபந்து சபைக்கே அதிகாரம் இருக்கின்றது. ஆகையால் அந்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை தவிர்ந்த வேறு எவருக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும், அரச வாகனங்கள், அரச பொது உடைமைகளைத் தேர்தல் பிரசார பணிகளுக்காக உபயோகப்படுத்துவது, சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“ஆகையால் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற இத்தருணத்தில், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், அவர்கள் வசமிருக்கும் அரச வாகனங்கள், வளங்கள் ஆகிய அனைத்தையும், உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களிடம் கையளிக்குமாறு, மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன். அவற்றைக் கையளிப்பதில் தாமதம் ஏற்படுமாயின், பொலிஸார் மூலம் சட்ட ரீதியாக அவ்வாகனங்களை மீளப் பெறுவதற்கும், அவ்வாறு சட்டத்தை மீறிச் செயற்படுபவர்கள் எவராக எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பினும், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

“ஆகையால் அரச வாகனங்களை உபயோகப்படுத்துதல், அரச பொது உடைமைகளை உபயோகப்படுத்துதல் ஆகியவற்றை இத்தருணத்தில் முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறும், அவ்வாறான உபயோகம் சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதையும், உங்களுக்கு நான் மிகுந்த தயவுடன் ஞாபகப்படுத்துகின்றேன்.

“ஆதலால், இத்தேர்தலைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு நான், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் நாம் எமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்போம். தேர்தல் காலப்பகுதியில் மோதல்களை ஏற்படுத்திக்கொள்ளாது, அமைதியாகவும் மிகுந்த புரிந்துணர்வுடனும் செயற்படுவதன் மூலம், அமைதியான ஜனநாயக வழியிலான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், நாட்டு மக்களாகிய அனைவரும் ஏற்க வேண்டிய, மிகப் பரந்த பொறுப்பாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் இங்கே ஞாபகப்படுத்திய இந்த விடயங்களுடன், உன்னதமான எமது இந்தத் தாய்நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் சுபீட்சமிக்க பொருளாதாரத்தையும் நவோதமிக்க உயரிய தேசத்தையும் உலகில் சிரேஷ்ட உன்னதமான அரச நிர்வாகத்தைக் கொண்ட ஒழுக்கமும் அமைதியும் நற்பண்புமிக்க சுதேசத்துவத்தை முதன்மைப்படுத்திய பெறுமானங்கள் உள்ளிட்ட எமது கலாசாரத்தையும் நாட்டுப் பற்றையும் முதன்மையாகக் கொண்ட அரச நிர்வாகத்துக்காக, உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை நான் மிகுந்த தயவுடனும் கௌரவத்துடனும் கேட்டு நிற்கின்றேன்.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுக்காக, இரண்டு காரணங்களை அவர் வெளிப்படுத்தினார். பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவைத் தான் நியமித்த பின்னர், பெரும்பான்மையைக் காண்பிப்பதற்காக, ஊழல் நடவடிக்கைகள் இடம்பெற்றன என, அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான விலை, 100 மில்லியன் ரூபாய், 150 மில்லியன் ரூபாய் என்ற அளவில் காணப்பட்டு, ஒரு கட்டத்தில் 500 மில்லியன் ரூபாய் என்ற உயர்வுக்குச் சென்றது என அவர் தெரிவித்தார். ஆனால், யாரால் அப்பணம் வழங்கப்பட்டது, பணம் வழங்கப்பட்டமை தெரிந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை போன்ற விடயங்களை, அவர் விளக்கியிருக்கவில்லை.

இரண்டாவது காரணமாக, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை அவர் விமர்சித்தார். "ஜனாதிபதி தனது ஜனாதிபதிப் பதவிக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, பிரதமரை நியமிக்கும் போது, அதை அங்கிகரிக்க சபாநாயகர் மறுத்தார்" என்பதை, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான இரண்டாவது காரணமாக, ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆனால், பிரதமரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ள போதிலும், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பது தான், வாதப் பொருளாக உள்ள நிலையில், அதைப் பற்றி, ஜனாதிபதி எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.

அதேபோல், திட்டமிடப்பட்டபடி 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுமாயின், நாடாளுமன்றத்தில் மோதல்கள் ஏற்படும் என வெளியான செய்திகளைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சிறிசேன, அங்கு உயிரிழப்பும் கூட ஏற்படும் எனக் கூறப்பட்டதெனவும், அவ்வாறு நடைபெற அனுமதித்தால், நாட்டில் பாரதூரமான நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாயிரத்துக்குப் பதினைந்தாம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து, 41 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தமையையும், அப்போது பிரதமராக இருந்த டி.எம். ஜயரத்னவை நீக்கியமையையும் ஞாபகப்படுத்திய ஜனாதிபதி சிறிசேன, இப்போது மாத்திரம் தனது நியமனம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்படுவது தொடர்பாக விமர்சித்தார்.

ஆனால், ஜனவரி 8, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலுக்குப் பின்னர் தான், அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்பதோடு, அதில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டமை பற்றி, ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கவில்லை.

இவ்வாறான பின்னணிகளில், நாட்டில் மீண்டும் தேர்தலை நடத்துவதே சிறந்ததெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காகவே நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததாகத் தெரிவித்தார். அத்தோடு, நாடாளுமன்றத் தேர்தலில், ஊழல்வாதிகளை விடுத்து, தூய்மையானவர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பு, மக்களுக்கே உண்டெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்றம் தற்போதை கலைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, புதிய அமைச்சர்கள் ஆகியோர் மாத்திரமே, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, அரச வாகனங்களையும் சொத்துகளையும் பயன்படுத்த முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர், அரச வாகனங்களையும் சொத்துகளையும் உடனடியாக ஒப்படைக்குமாறும் கோரினார். இல்லாவிடின், அவர்கள் யாராக இருந்தாலும், பொலிஸாரைப் பயன்படுத்தி அச்சொத்துகள் கைப்பற்றப்படுமெனவும், அவர்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், ஜனாதிபதி இதன்போது எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .