2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பஸ் கட்டணம் 12.5% அதிகரிப்பு

Editorial   / 2018 மே 17 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை அங்கிகாரமளித்த 6.56 சதவீத பஸ் கட்டணம் இரத்துச் செய்யப்பட்டு, 12.5 சதவீத பஸ் கட்டணத்தை வழங்குவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக, ஆகக்குறைந்த கட்டணமான 10 ரூபாயை 12 ரூபாயாக அதிகரிப்பதற்கு, அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தனரென்று, அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் உரிமையாளர்களின் சங்கப் பிரதிநிதிகள், அகில இலங்கைத் தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் ​அபேசிங்ஹ, நிதி மற்றும் ஊடகத்துறைப் பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன், நேற்று (16) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போதே, மேற்படித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் யாவும் எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதென்றும், சம்மேளனத்தின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

இந்தக் கட்டணத் திருத்தத்துக்கான அங்கிகாரம், எதிர்வரும் 22ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த உறுதிமொழியை அடுத்தே, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த தனியார் பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு, நேற்றிரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

​டீசல் விலையேற்றத்துக்கு சமாந்தரமான மற்றும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவேண்டிய வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பு ஆகியனவற்றைக் கவனத்திற்கொண்டு, பஸ் கட்டணங்களை 20 சதவீதத்தால் அதிகரிக்குமாறும் ஆகக் குறைந்த கட்டணமாக, 15 ரூபாயை அறிவிக்குமாறும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.

அந்தக் கட்டணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்காவிடின், நேற்று (16) நள்ளிரவு முதல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதற்கு, சங்கங்கள் தீர்மானித்திருந்தன.

எனினும், 15ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, பஸ் கட்டணங்களை 6.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரமளித்தது. எனினும், அந்த அதிகரிப்பை ஏற்றுக்கொள்ளாத சங்கங்களின் பிரதிநிதிகள், வேலைநிறுத்த அறிவிப்பொன்றை விடுத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையிலேயே, பஸ் கட்டணங்களை 12.5 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .