2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மலையகத்தில் சகலரும் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர்’

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் வீட்டுத் திட்டத்துக்காக உள்வாங்கப்படுவர் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பிரதமரின் இணைப்புச் செயலாளரும் பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏற்று ஹப்புத்தளையில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அங்கு மேலும் உரையாற்றுகையில்,

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நினைவுகூர்ந்தோடு,

செந்தில் தொண்டமான் கடந்த 12 வருடங்களாக மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார் எனவும்,   அவர் மலையகத்துக்காக குரல் கொடுத்துவரும் இளம் தலைவர் என்றும் தெரிவித்தார். 

மலையக அரசியல்வாதிகள் பலர் எம்மைச் சுற்றியிருந்தாலும் மலையக மக்கள் தொடர்பில் தொண்டமான் மட்டுமே பேசுவார் என்றும், அதுபோன்றே தற்போது செந்திலும்,  மலையக மக்களின் பிரச்சினைகள் தம்மோடு கலந்துரையாடுகிறார் எனவும் தெரிவித்தார்.

செந்தில் தொண்டமான் தன்னிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தாரெனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முதல் கோரிக்கையாக, ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வேண்டுமென கேட்டிருந்த நிலயில் அதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அதேபோல், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரமே இதுவரை காலமும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும், அதனை மாற்றியமைத்து மலையகத்தில் வாக்காளர் இடாப்பில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்ட வேண்டுமென அவர் முன்வைத்த கோரிக்கையையும் தான் ஏற்றுக்கொண்டுள்ளேன் என்றார். 

அதேபோல்,  பதுளையில் ஏற்கனவே இரண்டு பாடசாலைகளை விஞ்ஞான கல்லூரிகளாக செந்தில் தொண்டமான் தரமுயர்த்தியுள்ளார் என்றும், மேலும் இரண்டு பாடசாலைகளில் விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கைகளையும் தான் ஏற்றுக்கொண்டுள்ளேன் என்றார். 

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைவருக்கும் அரசாங்கத் தொழில் வழங்க முடியாது என்பதால், இளைஞர், யுவதிகளுக்கு அவர்களின் தேவை உணர்ந்து ஊவா மாகாணத்தில் தொழிற்சாலைகள் நிருவப்பட வேண்டும் என செந்தில் முன்வைத்த கோரிக்கையை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

செந்திலுடைய திறமையையும் நேர்த்தியான அரசியல் பயணத்தையும் கருத்திற்கொண்டு மலையகத்தின் எதிர்காலத்துக்காகவும் அவர் செயற்படுவார் என்ற உறுதியான நம்பிக்கையுடனேயே அ​வருடைய கோரிக்கைகளை தான் ஏற்றுக்கொண்டதாகவும்,  தேயிலைத் தொழிற்துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் நாம்  எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். 

இலங்கைத் தேயிலையை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான செயற்திட்டங்களையும் விளம்பர உத்திகளையும் நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்த பிரதமர், மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .