2024 மே 11, சனிக்கிழமை

முஹுது விஹாரைக்கான காணி அளவீடு இடைநிறுத்தம்

Editorial   / 2020 ஜூன் 23 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா  

பொத்துவில் முஹுது மஹா விஹாரைக்கான காணி அளவீட்டுப் பணிகளை, நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை இடைநிறுத்தி வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டுள்ளது.  

அக்காணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தால் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, முன்னகர்த்தல் மனுவில் ஊடாக, நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, நீதவான் எம்.எச்.முஹம்மட் றாபி, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.  

இவ்வழக்கில், பிரதிவாதிகளான 13 குடியிருப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் சட்டத்தரணி முஹம்மட் கதீர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.  

குறித்த காணி தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமும் தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் படியும் 30 ஏக்கர் காணியை மாத்திரமே அளவீடு செய்வதற்கு அத்திணைக்களத்துக்கு அதிகாரம் உள்ளதெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், அ​ைத அளவீடு செய்த பின்னர் அவைத் தொடர்பிலான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றார்.   

இந்த 30 ஏக்கர் காணிக்குள் 13 குடியிருப்பாளர்களும் கட்டடம் நிர்மாணிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அக்குற்றச்சாட்டு இல்லையென்று ஊர்ஜிதமாகும் பட்சத்தில் அவர்கள் தமது இடங்களில் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.   

அதேவேளை, 30 ஏக்கர் காணிக்குள்ளிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு ஜயபூமி காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், சட்டபூர்வமாகவே அவர்கள் அங்கு குடியிருக்கிறார்கள் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.  

தொல்லியல் ஆய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களோ, பொலிஸாரோ குறித்த இடத்துக்குச் சென்று, மக்களுக்கு மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டை இத்தேர்தல் காலம் முடியும் வரை செய்யக்கூடாதென கேட்டுக்கொண்டார்.  
இதனையடுத்து, தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தின் சார்பில் வருகை தந்திருந்த உத்தியோகத்தர்களிடம் இவ்விவகாரம் தொடர்பில் நீதவான், விளக்கம் கோரினார்.  

பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணியினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் சரியெனவும், 30 ஏக்கர் காணி அளவீடு ஏற்கெனவே, செய்யப்பட்டிருப்பதாகவும் வரைபடங்களை வரைவதற்காக அரசாங்க நில அளவீட்டுத் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் விளக்கமளித்தனர்.  

இதனை ஏற்றுக் கொண்ட நீதவான், இது சம்பந்தமான அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து, சர்ச்சைக்குரிய குடியிருப்பிடங்கள், முஹுது மஹா விஹாரைக்கான 30 ஏக்கர் காணிக்குள் இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானித்ததன் பின்னர், குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதா அல்லது கட்டிட நிர்மாணத்துக்கு அவர்களை அனுமதிப்பதா என்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டு, இவ்வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படுமென அறிவித்ததுடன், இத்தேர்தல் காலத்தில் அப்பகுதிக்குச் சென்று, மக்கள் பதற்றமடையும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டாமென பணித்தார்.   

பொத்துவில் முஹுது மஹா விஹாரைக்கான காணியில் குடியிருப்போர் சட்டவிரோத கட்டிடங்களை அமைக்கின்றனரென குற்றஞ்சாட்டி, தொல்லியல் ஆய்வுத் திணைக்களத்தால், இவ்வழக்கு தாக்கல் 2019 நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

இவ்வழக்கு, ஓகஸ்ட் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவிருந்தது. எனினும், அப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து, இவ்வழக்கு முன்னகர்த்தல் மனுவின் ஊடாக, நேற்று (22) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.   
இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஓகஸ்ட் 05 ஆம் திகதியன்று தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் ஆணையாளரின் அறிவிப்புக்கு முன்னர் அத்திகதி தீர்மானிக்கப்பட்டதால், அடுத்த அமர்வு குறித்து பின்னர் பரிசீலிக்கப்படுமென அறிவித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .