2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து குற்றச்சாட்டு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 மார்ச் 22 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட காணியை, வேறு காரணங்களைக் காட்டி, ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயம், வெளிநாடுகளிலுள்ளவர்களுக்குக் கையளிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக, ஜனாதிபதிக்கு முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று  பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை மேற்கு கிராமசேவகர் பிரிவிலுள்ள குருசாமி கண்டம் எனும் இடத்தில் சுமார் 14 ஏக்கர் காணியை, ஐந்து விவசாயிகள் இணைந்து, ஏக்கருக்கு 200,000 ரூபாய் செலவு செய்து, திருத்தி, நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலமாக நீரை இறைத்து விவசாய நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நெற்காணி இடாப்பில் பதியப்பட்டு, விவசாய மற்றும் பண்ணை நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான பதிவுகளும் உள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிலருக்குக் கைமாற்றிக் கொடுப்பதற்கான செயற்பாடுகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடர்பில், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

“குறித்த விவசாயிகள், பயிர்ச்செய்கையில் ஈடுபடுகையில் பல நபர்களால் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். குறித்த காணி காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமானதாகையால் விவசாயச் செய்கையை மேற்கொள்வதற்காக குத்தகைக்குப் பெற்றிருந்தோம்.

 

“சுமார் 60 - 70 வருடகாலமாக, உரிமை கோரப்படும் நபர்களாலோ அல்லது அவரது தாய் தந்தையராலோ பயிரிடப்படாத காணிகளிலிருந்து நடப்புக் காலப்பகுதியில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

“நாங்கள் சட்டவிரோதமாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகவும் எங்களை காணியை விட்டு வெளியேறுமாறும் காணிச்சீர்திருத்த தலைமைக் காரியாலயத்தினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இங்கு முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையானது பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

“எனவே இது தொடர்பான விரிவான விசாரணையை ஆரம்பித்து, இங்கு நடைபெறும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளியை ஏற்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட காணியை குத்தகை மூலம் அல்லது உறுதி மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “அரச வேலைவாய்ப்புகளுக்காகப் பலரும் போராடிக் கொண்டிருக்கையில்,  வாழ்வாதாரத்துக்காக இவ்வாறான சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வரும் போது, இவ்வாறான பல அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டியுள்ளமையானது மிக மிக மனவேதனைத் தருகின்றது. இப்பிரச்சினையால் எனது பொருளாதார நிலைமை மகவும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது என்பதனையும் தங்களுக்குத் தாழ்மையுடன் தெரியப்படுத்த விரும்புகின்றோம்” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், பணிப்பாளர், காணி சீர்திருத்த ஆணைக்குழு, தலைமைக் காரியாலயம், கொழும்பு, காணி சீர்திருத்த ஆணைக்குழு, மாவட்ட செயலகம், மட்டக்களப்பு., அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம், மட்டக்களப்பு, பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், செங்கலடி ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .