2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘பிரச்சினைகளை தீர்க்க முடியாத த.தே.கூவின் நிலை கவலைக்குரியது’

வா.கிருஸ்ணா   / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) பிரதிநிதித்துவப்படுத்தும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பல விடயங்களை செய்யும் போது, 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சில பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது என, ஜே.வி.பியின் பொதுச்செயலாளரும் கோப்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தார்.

​ஊழல் அற்ற, மோசடிகள் அற்ற நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

மட்டக்களப்புக்கு நேற்று விஜயம் செய்த அவர், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தை சந்தித்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துகளைப் பரிமாறினார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் நிலாந்தன் உட்பட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கையில் ஊழல்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் ஜே.வி.பியின் பொதுச் செயலாளரும் கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹெந்து நெத்தி தெளிவுபடுத்தினார்.

இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தற்போதைய நிலைமை, நல்லாட்சிக்கு முன்னர் இருந்த செயற்பாடுகள், அதன் பின்னரான நிலைமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் தமது கவனத்துக்கு இதுவரையில் கொண்டுவரப்படவில்லையென தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இனிவரும் காலங்களில் தாம் இது தொடர்பில் பூரண கவனம் செலுத்துவதாகவும் இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கு நிலவுகின்றது. இது தொடர்பில் கோப் குழு கவனம் செலுத்தவேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இது தொடர்பில் தமது கவனத்துக்கு யாரும் இதுவரையில் கொண்டுவரவில்லையெனவும் இது தொடர்பில் தாம் கவனம் செலுத்தி, உரிய விசாரணைகள் நடத்த நடவடிக்கையெடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹெந்துநெத்தி உறுதியளித்தார்.

அத்துடன், கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் எதனோல் உற்பத்திச்சாலை தொடர்பிலும் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்கள், அதன் நிலைமை தொடர்பில் கேள்வியெழுப்பினர்.

எனினும், குறித்த எதனோல் உற்பத்தி நிலையம் திறக்கப்படாது என்பதை உறுதியாகக் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .