2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் இலக்கை எட்டும்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 05 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மாவட்டம் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் இலக்கை விரைவில் எட்டும்  என தான் உறுதியாக நம்புவதாக  மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய உணவுற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு தாந்தாமலை விவசாய போதனாசிரியர் பிரதேசத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் வெவ்வேறு நிலங்களில் விளைவிக்கப்பட்ட விதை நிலக்கடலை  அறுவடை விழா இன்று(05) இடம்பெற்றது.

பிரதேச விவசாயப் போதனாசிரியர் வடிவேல் சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு, மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் விதை நிலக்கடலைப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு மட்டக்களப்பு விவசாயத் திணைக்களம் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் காரணமாக சிறந்த நிலக்கடலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது எதிர்வரும் பெரும்போகத்திற்கான நிலக்கடலைச் செய்கைக்கான விதை நிலக்கடலைத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.

இத்தகைய முயற்சி மாவட்டத்தின் உப உணவுத் தேவையை உள்ளுரிலேயே உற்பத்தி செய்யும் தன்னிறைவைத் தரும் என எதிர்பார்ப்பதோடு விவசாயிகள் மத்தியில் ஊக்கத்தையும் அளித்துள்ளது.

இவ்வாறு, உற்பத்திகளை அதிகரித்து வெளிநாட்டிலிருந்து வரும் இறக்குமதிகளைக் குறைக்க வேண்டும். இதுதான் அரசாங்கத்தினதும் விவசாயத் திணைக்களத்தினதும் நோக்கமாகும்.

எனவே, நமது வளங்களிலும் நமது திறமைகளிலும் அபார நம்பிக்கை வைத்து அயராத முயற்சியில் ஈடுபட்டால் மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு காணும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .