2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டு ஒப்பந்த வழக்கு; தள்ளுபடிக்கு எதிராக மனு

Editorial   / 2018 ஜூலை 26 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில், மக்கள் தொழிலாளர் சங்கத்தினரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு தள்ளுப்படி செய்யப்பட்டமையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், விசேட மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், ஜூன் மாதம் 12ஆம் திகதியன்று, இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கெதிராகவே, நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

முதலாளிமார் சம்மேளனத்துடன், 2016ஆம் ஆண்டு செய்து​கொள்ளப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம், சட்டத்துக்கு முரணானது என்பதால், அதனை இரத்துச் செய்யும்படி, மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையாவால் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக எடுக்கப்படக் கூடிய விசேட நீதிமன்ற நடவடிக்கைகளில், இந்த விசேட மேன்முறையீட்டு மனு, இறுதியாக இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளரால், அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகள், தொழில் சட்டங்களின் பகுதியாவதால், அவை நடைமுறையில் இருக்கும் தொழிற்சட்டங்களுக்கு முரணாகவோ தொழிலாளர்கள் இதுவரை அனுபவித்துவரும் உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ இருக்குமாயின், அவற்றுக்குச் சட்ட அந்தஸ்த்து கொடுக்கும் வகையில், அதனைத் தொழில் ஆணையாளர் பிரசுரிக்க முடியாது.
சட்டத்துக்கு விரோதமாக, 2016ஆம் ஆண்டில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கூட்டு ஒப்பந்தத்தைத் தொழில் ஆணையாளர் பிரசுரித்தமையால், அதனை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியுமென்று, விசேட மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தொழில் ஆணையாளர் ஒரு பகிரங்க அரசாங்க உத்தியோகத்தர் என்பதாலும் அவரால் வெளியிடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் பற்றிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க ஆவணம் என்பதாலும் அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து பொது நலன் அக்கறைக்குரிய விடயம் என்ற அடிப்படையில் ரிட் மனுவை தொடுக்கவும் அவருக்கு வழக்கிடும் உரிமையும் இருப்பதாகவும் அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அவருக்கு வழக்கிடும் உரிமையில்லையென பிரதிவாதிகள் முன்வைத்த முதன்நிலை ஆட்சேபனையின் அடிப்படையில் மனுவைத் தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளையை நீக்கி, ரிட்-மனுவை விசாரணைக்கு ஏற்று, மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணங்களை வழங்குமாறும், மேன்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .