2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’சிலைகளை நிறுவாமல் உள்ளத் தூய்மையை உறுதிபடுத்துவோம்’

Kogilavani   / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'நாடுமுழுக்க சிலைகளை நிறுவிக்கொண்டு போவதற்குப் பதிலாக உள்ளத் தூய்மையை, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்' என கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாந்தர் மாநாடும் கலை விழாவும் வியாழக்கிழமை, மட்டக்களப்பு சுவாமி விபுலாந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,  

'சுவாமி விபுலாநந்தர், ஆபிரஹாம் பண்டிதர் ஆகியோர் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் பரந்த அளவில் உலகம் தழுவிய ரீதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

'அது ஆளுமைகளின் கொண்டாட்டமான காலமாக இருந்தது. சுவாமி விபுலாநந்தர் ஆபிரஹாம். பண்டிதர், தனிநாயகம் அடிகளார் இவ்வாறு ஒரு தலைமுறை அறிஞர்கள் உலகம் தழுவிய ரீதியில் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டதன் விளைவாக, தமிழiயும் அறிவுப் பலத்தையும் விசாலித்திருக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியை சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் எவ்வாறு முன்னெடுப்பது என்பது எங்கள் முன்னாலுள்ள மிக முக்கியமான ஒரு கேள்வியாகும்.

'இப்பொழுது நாடு முழுக்க பல சிலைகளை நாங்கள் நிறுவிக்கொண்டு போகின்றோம். ஆயினும், இந்தச் சிலை நிறுவல் பாதுகாப்புக்கு மிகவும் இடைஞ்சலானது என்று பொலிஸார் தங்களது அறிக்கைகள்  மூலம்  அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

'ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் 'உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது' என்று சுவாமி விபுலாநந்த அடிகளார் கூறிய அருள்வாக்குத்தான் எங்கள் முன்னாலுள்ள தேவையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கையுமாகும்.

'எமது மூதாதையரான அறிவுப் போராளிகள் தங்களைத் தியாகம் செய்து சுயநலம் மறந்து இதனைத்தான் செய்தார்கள். அவர்கள் பெரிய அறிவுச் சமர் செய்தார்கள். அதனை நாம் முன்னெடுக்க வேண்டும். அதன் தொடராக இது தொடர்ந்தால் நல்லது. நடைமுறையில் இதனை நாம் செய்தாக வேண்டும்.

'யாழை சிற்பமாகவோ, உருவமாகவோ வைத்துப் பாதுகாப்பதால் எந்தப் பெருமையும் நமக்குக் கிட்டப்போவதில்லை. யாழை வாசிக்க வேண்டும். கலைஞர்களை உருவாக்க வேண்டும்.

'இந்து கலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சரான செல்லையா இராஜதுரையால்; உருவாக்கப்பட்ட இந்த நிறுவகம், மேலும் பல கலைஞர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

'தரமான இளம் வீணை இசைக்கலைஞர்களை நாம் தாராளமாக உருவாக்க வேண்டும். அருவிக்கொண்டு வரும் புல்லாங்குழல் கலைஞர்களையும் உருவாக்க வேண்டும்.

'கலை நிறுவனங்கள் இல்லாத காலகட்டத்தில் நாங்கள் கலைகளில், அவற்றைப் பாதுகாப்பதில் மேலும் வளர்ப்பதில், பெருமை சேர்ப்பதில் கொடிகட்டிப் பறந்தோம். எமது பாரம்பரியக் கலைகளின் பெருமை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அப்போதெல்லாம் சிலாகித்துப் பேசப்பட்டது.

'அந்த நிலைமையை மீண்டும் நாம் கொண்டு வர வேண்டும்.

'ஆற்றுகைகளையும் அத்தாட்சிப் பத்திரங்களையும் மையப்படுத்தியதாக எமது கல்வி இருப்பதன் காரணமாக எங்களால் ஆற்றுகையாளர்களை உருவாக்குவது மிகவும் சிரமமானதாக இருக்கின்றது.

'பட்டங்களைக் கொண்டு பட்டங்களை உருவாக்கும் செயற்பாடே நடந்து கொண்டிருக்கின்றது. இது சார்ந்து நாங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான பிரேரணைகளைச் சமர்ப்பித்திருக்கின்றோம்.

'இத்தகைய காலத்தால் அழியாத பணிக்கு சமூகம் சார்ந்த அறிஞர்கள் மற்றும் பொறுப்பாளர்களினதும் பங்களிப்பு இன்றியமையாததமாகும்.' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .