2024 மே 15, புதன்கிழமை

அவைத்தலைவரின் நிலை என்ன?

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார்.

இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி குற்றவாளிகள் எனவும் எனவே, அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் எனவும் மறுநாள் மதிய வேளைக்குள் இராஜினாமா கடிதங்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

மேலும், மற்றைய இரு அமைச்சர்களுக்கும் எதிரான விசாரணை, முழுமை பெறவில்லை என்பதால், அவர்களுக்கும் எதிராக விசாரணை இடம்பெறும். அதுவரை இருவரும் 1 மாத விடுப்பில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அன்றிரவோடிரவாக முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு, அதில் 15 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உட்பட இதர உறுப்பினர்களால், வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்பின்னர், மறுநாள், முதலமைச்சருக்கு ஆதரவாக 15 உறுப்பினர்கள்,  கையொப்பமிட்ட மனுவொன்றை  ஆளுநரிடம் கையளித்தனர்.

மேலும், முதலமைச்சருக்கு ஆதரவாக வடக்கில் போராட்டங்கள் இடம்பெற்றதுடன் ஹர்த்தாலும் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் பின்னரான குழப்ப நிலைகளை பல தரப்பினரும் இணைந்து, சமரச நிலைக்குக் கொண்டுவந்தனர்.

எனினும், ஓர் அவைக்குரிய தலைவர் நடுநிலையாக செயற்பட வேண்டியவர். ஆனால் வடமாகாண சபையில் அவ்வாறு இல்லாது, அவைத்தலைவரே முன்னின்று முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண ஆளுநரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்தமைப் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், திங்கட்கிழமை (19) இரவு முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

“அவைத்தலைவர் நடுநிலையாக இருக்க வேண்டியவர். அமைச்சர் மீதோ அல்லது முதலமைச்சருக்கு எதிராகவோ பிரேரணை கொண்டுவருவதாக இருந்தால், முதலில் அவைத்தலைவரிடம் தான் கையளிக்க வேண்டும். ஆனால், இங்கு அவரே முன்னின்று, ஆளுநரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்துள்ளார்.

“அவைத்தலைவரின் நடுநிலமை இதனூடாக கேள்விக்குறியாகியுள்ளது. அவருடைய செயல் சட்டத்துக்கு புறம்பானது என எண்ணுகின்றேன். இதனை அனைத்து உறுப்பினர்களும் விவாதிக்க இருக்கின்றார்கள்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இவ்விடயம் தொடர்பாக எவரும் எம்முடன் கதைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், வியாழக்கிழ​மை  (22) வடமாகாண சபையின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இவ்விடயம் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .