2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘போட்டிக் கல்வி முறைமை பொறாமையை வளர்க்கின்றது’

Editorial   / 2018 ஜனவரி 17 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“போட்டிக் கல்வி முறைமை எமது மாணவர்களிடையே பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்த்து வருகிறது. இதுவே பின்னாளில் எந்தக் குறுக்குவழியில் சென்றேனும் எந்தச் சதியைச் செய்தேனும் தான் விரும்பிய இலக்கை அல்லது பதவியை அடைவதுக்கு அவர்களைத் தூண்டுகிறது” என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நேற்று (16) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களை சித்தியடைய வைக்கப் பெற்றோர்கள் படாதபாடுபடுகிறார்கள். மாணவர்களின் சித்தியை அவர்களது உயர்ச்சி என்று மட்டும் பார்க்காமல், தங்களின் கௌரவமாகவும் பார்க்கத்தலைப்படுகிறார்கள். சித்தி அடையும் மாணவர்கள் கிரீடம் சூட்டப்பட்டுப் பட்டமளிப்புவிழா போலக் கௌரவிக்கப்படுகிறார்கள். இந்தக் கோலாகலங்கள், சித்தியடையத்தவறும் பிஞ்சு மாணவர்களின் மனோநிலையை எவ்வாறு பாதிக்கின்றது என்பது பற்றி யாரும் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. அவர்களை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை நாங்கள் தண்டிக்கிறோம். இதுவே அவர்களின் மனதில் தாழ்வுமனப்பான்மையும் அடுத்தவர்மீது பொறாமையையும் வளர்க்கிறது.

ஆரோக்கியமற்றபோட்டி எதனையும் உடனடியாக அடைந்துவிடவேண்டும் என்ற அவசரமனப்பான்மையும் இன்றைய இளைய தலைமுறையிடையே வளர்த்து வருகிறது. கனவுகளை வளர்த்துக்கொண்டால்தான் முன்னேறவும் முடியும். ஆனால், அதற்கான படிமுறைகளைத் தாண்டாமல் தாவுவதற்கு ஆசைப்படுவதே தவறானது. இதுவே பலரைக் குறுக்கவழிகளை நாடவைக்கிறது. குற்றச்செயல்களையும் புரியவைக்கிறது.

பாடப்புத்தகங்கள் அல்லாத ஏனைய துறை நூல்களையும், உலகுக்கே வழிகாட்டியாக அமைந்த தலைவர்களது வாழ்க்கை வரலாற்று நூல்களையும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்து அவற்றை வாசிப்பதற்கு ஊக்குவிக்கவேண்டும். அப்போதுதான் அவர்களின் எதிர்கால வாழ்க்கை நேரான சீரிய பாதையில் சென்று முழுமையுறும் என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .