2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஏறாவூரில் மே தினக்கூட்டம்

Editorial   / 2018 மே 06 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, மாவடிவேம்புக் கிராமத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள மேதினக் கூட்டத்துக்கான சகல ஏற்பாடுகளும், பூர்த்தியாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை (07) இடம்பெறும் இக்கூட்டத்துக்கு, நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் வரும் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்களை அழைத்து வருவதற்காக சுமார் 1500 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வெளியூர்களிலிருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மட்டக்களப்பு மாவட்ட மக்களும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்ளவுள்ளார்கள் என்று மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்தும், தமிழ் பேசும் சமூகத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மதிப்பளித்து இந்த தொழிலாளர் தினத்தை தமிழ் பேசும் பிரதேசத்தில் நடாத்துகின்றது என தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில், பெருந்தேசிய பூர்வீகக் கட்சியொன்று, அதனது மேதினக் கூட்டத்தை ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் நடாத்துவது இதுவே முதற்தடவையாகும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை தொடர்ந்து பேசிய அவர், “இது மட்டக்களப்பு மாவட்டத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவே நாங்கள் கருதுகின்றோம். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகமான ஆசனங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் கைப்பற்றியிருந்தது.

குறிப்பாக செங்கலடி பிரதேச சபை, காத்தான்குடி நகர சபை ஆகியவற்றில் நாங்கள் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தோம். இதன் காரணமாக இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தினத்தை மட்டக்களப்பில் நடத்த கட்சியின் தலைவரும்,  ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்தார்.

“இந்த தொழிலாளர் தினமானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்படுவதால் எமக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும். எனவே, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல மக்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும்” என்று மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .