2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மஹிந்தவின் மீள்எழுச்சி தொடர்பில், அவதானமாக செயற்பட வேண்டும்’

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மஹிந்தவின் மீள்எழுச்சி எவ்வாறான தாக்கங்களை எமக்கு ஏற்படுத்தப் போகின்றது என்பது தொடர்பில் நாம் அவதானமாகச் சிந்திக்க வேண்டும் என” நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கான திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய அரசியலைப் பொறுத்தவரை நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சிங்கள பேரினவாதம் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்று கொண்டிருக்கின்றது.

இன்று மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டெழுந்து கொண்டிருக்கிறார். இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின் மூலம் சிங்கள மக்கள் மத்தியிலான அவரது இனவாதக் கருத்துக்கள் அவரை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளது. மஹிந்தவின் மீள்எழுச்சி எவ்வாறான தாக்கங்களை எமக்கு ஏற்படுத்தப் போகின்றது என்பது தொடர்பில் நாம் அவதானமாகச் சிந்திக்க வேண்டும்.

மேலும் தற்போதைய அரச தலைமைகளும் எங்களுக்கு உரிய முறையில் தீர்வுகள் எதனையும் பெற்றுத்தரக்கூடிய நிலைமையில் இல்லை. எனவே சிங்கள மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் வரை தொடர்ந்துவரும் சிங்கள அரசுகள் தமிழர்களை ஏமாற்றி வருவது ஒரு வரலாறாகப் பதியப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ அரசை தோற்கடிக்கும் வரை தமிழர்களாகிய நாம் ஒரு அடிமையான வாழ்வையே வாழ்ந்தோம். தற்போதுதான் ஓரளவு அடிமை வாழ்வில் இருந்து மீண்டெழுந்திருக்கிறோம். நாம் இன்னமும் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய சாத்தியம் ஏற்படவில்லை. சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் ஆயுதப் போராட்ட காலம் வரை தமிழினம் ஒற்றுமையாகப் பயணித்துள்ளது. தொடர்ந்தும் இவ்வாறு பயணிக்க வேண்டும். தமிழர்களின் ஒற்றுமையே பலம். ஒற்றுமைக்காக எமது தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

எமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும். எமது ஒற்றுமையை உருக்குலைத்து விட்டால் எமது இனத்தின் இருப்பு என்பது கேள்விக் குறியாகிவிடும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .