2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஸ்கட் ஏவுகணையை ஏவியது வடகொரியா

Editorial   / 2017 மே 29 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா, ஆகக்குறைந்தது ஒரு குறுந்தூர ஏவுகணையை, நேற்று (29) ஏவியுள்ளதுடன், குறித்த ஏவுகணையானது, வடகொரியாவின் கிழக்குக் கரையோரத்துக்கு அப்பாலுள்ள கடலில் தரையிறங்கியுள்ளது.   

குறித்த ஏவுகணையானது, ஸ்கட் வகையான ஏவுகணையொன்று என நம்பப்படுவதாகவும், 450 கிலோமீற்றர் தூரம் பயணித்ததாகவும், தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

சோவியத் ஒன்றியத்தால் தயாரிக்கப்பட்ட குறுந்தூர ஏவுகணைகளின் பாரிய இருப்பொன்றை வடகொரியா கொண்டுள்ளது என்பதுடன், திருத்தியமைக்கப்பட்ட ஸ்கட் ஏவுகணைகள், 1,000 கிலோமீற்றர் வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில், ஏவுகணைகளை விருத்தி செய்வதை நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், தனது ஏவுகணை விருத்தியைக் கொண்டு செல்லும் நோக்கிலும், வடகொரியா தொடர்பான தென்கொரிய அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றுவதற்கான அழுத்தத்தை வழங்கும் நோக்கிலும் வடகொரியா செயற்படுகிறது என நம்புவதாக, தென்கொரிய பாதுகாப்புப் படைத்தொகுதியின் இணைப் பிரதானியின் பேச்சாளர் றொ ஜே-சியோன் தெரிவித்தார்.   

வடகொரியாவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்த தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், இம்மாதம் 10ஆம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்படும் மூன்றாவது ஏவுகணைச் சோதனை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை, 120 கிலோமீற்றர் உயரத்தை ஏவுகணை அடைந்ததாகத் தெரிவித்த றொ, தற்போதுவரை, ஆகக்குறைந்தது ஓர் ஏவுகணை இருந்ததாகவே கணிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தபோதும், ஆனால், இன்னும் பல ஏவுகணைகள் பற்றி ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.   

இந்நிலையில், குறுந்தூர ஏவுகணையொன்று கருதப்படுவதை, ஆறு நிமிடங்களுக்குக் கண்காணித்ததாகவும் ஆராய்ந்ததாகவும் தெரிவித்த ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளை, குறித்த ஏவுகணை, வடஅமெரிக்காவுக்கு ஆபத்தாக இருக்கவில்லை என்று கூறியுள்ளது.   

இதேவேளை, குறித்த ஏவுகணையானது, ஜப்பானின் பொருளாதார வலயத்துக்குள் தரையிறங்கியதாகக் கருத்தப்படுகின்ற நிலையில், குறித்த ஏவுகணை ஏவுதலுக்கான எதிர்ப்பை, ஜப்பான் பதிவுசெய்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .