2025 மே 19, திங்கட்கிழமை

கல்முனை நகரில் பொது வாகனத் தரிப்பிடம் அவசியம்

Niroshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.ஸினாஸ்

கல்முனை நகரில் பொது வாகன தரிப்பிடம் அவசியம் என கல்முனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏ. டப்ளியூ.ஏ.ஹப்பார் தெரிவித்தார்.

கல்முனை நகரில் வாகனம் செலுத்துவோரும் மோட்டார் வாகனப் பொலிஸாரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயும் ஒன்றுகூடல் கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.

இங்கு தலைமை தாங்கி உரையாற்றும போதே பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை நகரில் பொதுவான வாகன தரிப்பிடம் இல்லாமையால் இன்று பல தரப்பினரும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தனியார் வாகனங்கள் செலுத்துவோர் நகரிலுள்ள பிரதானவீதி, வியாபாரநிலையங்கள், அரச திணைக்களங்களுக்கு முன்னால் முறையற்ற விதத்தில் வாகனங்களை தரித்து வைப்பதால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

ஆனால், இதற்கு முன்னதாக நாம் சட்ட ஒழுங்கு அறிவித்தல் பதாகைகளை அமைக்கவுள்ளோம். அதன் பின்னர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.

தனியார் பஸ்களும் - இலங்கை போக்குவரத்து அதிகாரசபைக்கு சொந்தமான பஸ்களும் சில பிரதேசங்களுக்கு இணைந்த சேவையின் அடிப்படையில் போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன.

ஆனால் நேரமுகாமைத்துவத்தின் அடிப்படையில் இ.போ.ச. பஸ் தரிப்பிடத்தில் தனியார் பஸ் வண்டிகளை ஏன்  நிறுத்த முடியாது? எனவே, இதற்கு சரியான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றார்.

இங்கு உரையாற்றிய கல்முனை மாநகர ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி,

கல்முனை நகரில் 5 மில்லியன் ரூபாய் நிதியில் வாகன தரிப்பிடம் நிர்மாணிக்கப்படுவதற்கான பூர்வாங்க வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது போதாது எதிர்காலத்தில் நகருக்குள் வருகின்ற வாகனங்களை தரித்து வைக்கக்கூடிய பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பதற்குரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இது நடைமுறைக்கு வரும்போது நிறையப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X