2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வலயக் கல்விப் பணிப்பாளர் பதவி நியமனத்துக்கு தடையுத்தரவு

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியை நிரப்புவதற்காக, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கும் அதன் அடிப்படையிலான நியமனத்துக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கத்தினால், சட்டத்தரணி யூ.எல்.அலி சக்கி ஊடாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு வெள்ளிக்கிழமை(22), மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித மலலகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இந்த தடையுத்தரவைப் பிறப்பித்ததாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்முக்தார், இன்று (24) தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கென புதிய பிரமாணக் குறிப்பு அமுலுக்கு வந்த பின்னர், இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குரிய பதவிகளில் ஒன்றான வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரல், நேர்முகப் பரீட்சை நடத்துதல் மற்றும் நியமனம் வழங்கள் என்பன மாகாண கல்விச் செயலாளருக்குரிய அதிகாரமாகும் என வர்த்தமானி மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தனக்கு வழங்கப்படாத அதிகாரம் ஒன்றைப் பயன்படுத்தி மேற்படி பதவிக்கான நேர்முகப் பரீட்சையை கடந்த 06ஆம் திகதி நடத்தியிருந்ததுடன், அதன் பிரகாரம் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை வழங்க முற்பட்டிருந்தார்.

ஆகையினால், இந்த விடயம் சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எமது சங்கம் மனுத் தாக்கல் செய்திருந்தது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X