2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனி நபர் பிரேரணையை சமர்ப்பிக்க ஏற்பாடு

Niroshini   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பசுக்களை வழங்கி பால் குளிரூட்டும் நிலையங்களை அமைக்கும் திட்டத்தை செயற்படுத்துமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரணையை இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்;.உதுமாலெப்பை, நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையின் சமமான பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் 10ஏ, 11ஏ, நியூகுன மற்றும் எலக்கம்புர கிராமங்களில் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைப்பதற்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை வழங்குவதற்கும் கிழக்கு மாகாண சபையினால் 2014ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டது.

அத்துடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கும் இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு 2014ஆம்,2015ஆம் ஆண்டுகளில் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாங்காமம், இழுக்குச்சேனை 10ஏ, 11ஏ, நியூகுன, எலக்கம்புர கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு 400 பசுக்களை வழங்குவதற்கென 400 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில், 37 பயனாளிகளுக்கு மாத்திரமே  கிழக்கு மாகாண கால்நடை திணைக்களத்தினால் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இத்திட்டத்தினை தாமதிக்காது நடைமுறைப்படுத்துமாறு கோரி இன்று நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .