2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'அமைச்சர் தயா கமகேக்கு எதிராக பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளோம்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகேக்கு எதிராக எதிர்வரும் 13ஆம் திகதி கிழக்கு மாகாணசபையின் பேரவைச் செயலாளரிடம் விசேட பிரேரணையை  சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அட்டாளைச்சேனைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணசபையின் அதிகாரத்தின் கீழுள்ள ஹிங்குராணை தொழிற்றுறைத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டச் சந்தை விற்பனை நிலையத்தை கடந்த 27ஆம் திகதி  உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அங்கு செல்வதற்கு முன்னர்,  அமைச்சர் தயா கமகே அந்நிலையத்தை  திரைநீக்கம் செய்துவைத்துள்ளார். இவ்வாறு ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் நடந்துகொண்டமை கவலையளிக்கும்  விடயமாகும்.

வடகிழக்கு மாகாணம் தனியாகப் பிரிந்து கிழக்கு மாகாணமாக மாறி இரண்டாவது முறையாகவும் தன்னுடைய கிழக்கு மாகாண ஆட்சியை முன்னெடுத்து மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகின்றது. இதனை அமைச்சர் தயா கமகே, தான் மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் மாகாண சபையின் அதிகாரத்தையும் மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளையும் நன்றாக அறிந்தவராவார். இப்படியான ஒருவர் மாகாண சபையின் அதிகாரத்தினை கொச்சைப்படுத்தியதை எண்ணி நான் வெட்கப்படுகின்றேன்.

கடந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் சுமார் 20,000 க்கும் அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளதை அவர் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

இந்த ஆட்சி மாற்றத்துக்;கு முழுமையாக பெரும்பான்மை சமூகம் இருந்தபோதிலும், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து நல்லாட்சியினை உருவாக்கியுள்ளனர். அதன் காரணத்தால் கிழக்கு மாகாண முதலமைச்சர் அந்தஸ்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கின்றது.

இந்த நல்லாட்சியில் மூன்று இன மக்களும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்தும் நீடிக்கவேண்டுமாக இருந்தால் இவ்வாறனவர்களின் செயற்பாடுகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தை அடக்கி கட்டியாள வேண்டும் என்கின்ற நிலைமைக்கு வந்தபோது, அவைகளை தவிடு பொடியாக்கி ஒரு சிறந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்து காட்டியுள்ளோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்திவைக்க விரும்புகின்றேன்.

தற்போது இந்த நல்லாட்சி அரசின் மூலம் எமது நாட்டில் மக்கள் நிம்மதியாக தங்களின் வாழ்க்கை நடைமுறைகளை மாறிக்கொண்டு ஒரு நிம்மதியான வாழ்க்கை வட்டத்தில் வாழ்ந்து வருவதையிட்டும் எமது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X